இஸ்லாமாத்: இந்திய-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டிய தாக்குதல், தீவிரவாதிகளுக்கு ஆதரவு போன்ற பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இருநாட்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. கடந்த பல ஆண்டுகளாக இருநாட்டு அணிகளுக்கு இடையிலான நேரடி போட்டிகள் நடைபெறாவிட்டாலும்,சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் விளையாடின.

இந்நிலையில், மீண்டும் போட்டிகளை நடத்திட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், ஷஹர்யார் கான் இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், அடுத்த 8 ஆண்டுகளில் இரு நாடுகள் இடையே 5 தொடர்களை நடத்துவது என்றும், சவுதிஅரேபியாவில் வருகிற டிசம்பர் மாதம் முதலில் போட்டியைத்தொடங்கவும், கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், இதுவரை எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில், போட்டிகளை நடத்துவதற்கான இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், ஷஹர்யார் கான் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஷஹர்யார் கூறியது: பிசிசிஐ-யிடம் தொடர்பு கொண்டு வருகிறோம். காங்கிரஸ் ஆட்சியின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவில் அமைந்துள்ள மோடி தலைமையிலான புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இருநாட்டு அரசியல் விவகாரங்கள், கிரிக்கெட் போட்டியை பாதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே பாகிஸ்தான் சீனியர் வீரர் மிஸ்பா உல் ஹக், இந்தியாவுக்கு எதிரான ஒரு தொடரில் ஆடிவிட்டு ஓய்வு பெற திட்டமிட்டுள்ளாராம்.