சிட்னி: 2025 ஐபிஎல் தொடரை நிறுத்த வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் விமர்சனம் செய்திருக்கிறார். மேலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரையும் நிறுத்த வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
போர் பதற்றத்துக்குப் பிறகு ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருக்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்கள் இந்தத் தொடரில் கட்டாயப்படுத்தப்பட்டு விளையாட வைக்கப்படுகிறார்கள், அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்ற ரீதியில் அவர் விமர்சனம் செய்திருக்கிறார்.

2025 ஐபிஎல் தொடர் மே 8ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றத்தால் நிறுத்தப்பட்டது. அதற்குச் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் நிறுத்தப்பட்டது. பின்னர் இரண்டு தொடர்களும் மே 17 முதல் மீண்டும் தொடங்க உள்ளன.
இதில் ஐபிஎல் தொடர் உலகின் முதன்மையான கிரிக்கெட் தொடர் என்பதால், போர் பதற்றத்தால் தங்கள் நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் ஒரே வாரத்தில் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக வந்து இருக்கிறார்கள். ஆனால், இது போன்ற ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட வைக்கப்பட வேண்டி அழுத்தம் கொடுக்கப்படுகிறது என மிட்செல் ஜான்சன் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது இந்திய எல்லையில் போர் பதற்ற சூழ்நிலை எதுவும் இல்லாத நிலையிலும், மிட்செல் ஜான்சன் ஐபிஎல் தொடரை நிறுத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் பேசியிருப்பதாவது:
"என்னிடம் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று சொன்னால், நான் நிச்சயமாக 'முடியாது' என்று சொல்லி இருப்பேன். அது மிகவும் எளிதான முடிவாக இருந்திருக்கும். வாழ்க்கையும் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை. நமது சம்பளம் அல்ல. இது தனிப்பட்ட முடிவு. யாரையும் கட்டாயப்படுத்தியோ, அழுத்தத்தை உணர வைத்தோ மீண்டும் போய் விளையாட வேண்டும் எனச் சொல்ல முடியாது.
அது ஐபிஎல் தொடரோ அல்லது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரோ, அதற்காக நாம் கடினமாக முயற்சிக்க முடியாது. அந்த இரண்டு தொடர்களும் இப்போதே நிறுத்தப்பட வேண்டும் அல்லது அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். அப்படிச் செய்தால் மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படும்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தங்கள் வீரர்கள் தாங்களாகவே முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால், அந்த முடிவுகள் மிகவும் கடினமானதாக இருக்கும். விளையாட வேண்டாம் என்று வீரர்கள் முடிவு செய்தால், அது ஏமாற்றத்தை அளிக்கும். தொழில் முறையில் நிதி இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். ஆனால், பாதுகாப்பைத்தான் முதல் மற்றும் முக்கிய விஷயமாகப் பார்க்க வேண்டும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வீரர்கள் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி நாம் கேட்கும்போது, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வீரர்கள் தங்கள் முடிவின் மூலம் அபாயத்தையும், பல்வேறு தாக்கங்களையும் பற்றி ஆலோசிக்க வேண்டும். இறுதியில் ஒரு தனிநபர் தனக்குப் பாதுகாப்பாக உணர்கிறாரா, எது சரி என்பதைப் பற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதை விட்டு, தனது அணிக்கான அர்ப்பணிப்பு, தொடரை வெல்வது ஆகியவற்றை பற்றி சிந்திக்கக் கூடாது.
மேலும் மற்றொரு விஷயத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராக வேண்டிய நிலை உள்ளது. இப்போது ஐபிஎல் இறுதிப் போட்டி ஜூன் 3 தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஒரு வார காலத்திற்கு முன்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
இது வீரர்களின் தயாரிப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். டெஸ்ட் கிரிக்கெட் என்பது வேறு. ஆஸ்திரேலியாவை விட இந்த விஷயத்தில் தென்னாப்பிரிக்கா உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இத்தனைக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே SA20 தொடருக்கான நிதி உதவிகளும் இருக்கின்றன. அப்படி இருந்தும் அவர்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்" என மிட்செல் ஜான்சன் கூறியிருக்கிறார்.