சிட்னி: காயம் காரணமாக, ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சன், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்குவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி 2 டெஸ்ட்டில் தோற்று ஒரு டெஸ்டை டிரா செய்துள்ளது. கடைசி டெஸ்ட் சிட்னியில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சன், கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதில் இழுபறி நிலவுகிறது. நேற்று நடைபெற்ற பயிற்சியின்போது ஜான்சன் பங்கேற்காதது இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஜான்சன் காலில் தசை பிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, செவ்வாய்க்கிழமை டெஸ்ட் போட்டியில், ஜான்சனுக்கு பதிலாக மற்றொரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் களமிறங்க கூடும் என்று தெரிகிறது. உலக கோப்பை நெருங்கியுள்ளதால், காயத்தோடு, ஜான்சனை களமிறக்க ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
டோணி பங்கேற்காத தருணங்களில், தற்காலிக கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த விராட் கோஹ்லி, சிட்னி டெஸ்ட்டில் முழு நேர கேப்டனாக போகிறார். டோணி ஓய்வை தொடர்ந்து இந்தியா சந்திக்கும் முதல் டெஸ்டை, வெல்ல கோஹ்லிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை முடிந்துள்ள 3 போட்டிகளில் ஜான்சன் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.