ஆக்லாந்து: உலக தரம் வாய்ந்த பவுலர் ஒருவர், ஒரே பந்தில், அதுவும் வீசிய முதல் பந்திலியே, 11 ரன்கள் அள்ளிக் கொடுத்தார் என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
நியூசிலாந்து-ஆஸ்திரேலியா நடுவேயான லீக் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்தின், பிரெண்டன் மெக்கல்லம், மார்டின் குப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதல் ஓவரை மிட்சேல் ஜான்சன் வீசினார். உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இருப்பவர் ஜான்சன் என்பதால், ஏதாவது மேஜிக் செய்து, ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியா பக்கம் மாற்றுவார் என்று அந்த நாட்டு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு.
ஜான்சன் தனது முதல் பந்தை லெக் திசையில் வீச, அதை குப்தில், 4 ரன்களுக்கு விரட்டினார். ஆனால் காலை கிரீசுக்கு வெளியே வைத்து எறிந்ததால் அந்த பந்தை நோ-பால் என அறிவித்தார் அம்பயர். எனவே, பவுண்டரி மற்றும் நோ பாலுக்கான 1 ரன் என 5 ரன்கள் கிடைத்தது நியூசிலாந்துக்கு. நோ-பால் வீசியதால், அடுத்த பந்து ஃப்ரீ ஹிட்டாக கொடுக்கப்பட்டது.
இதையடுத்து வேகமாக ஓடி வந்த ஜான்சன், மிடில்-ஸ்டம்ப் லைனில்ஸ பிட்ச் செய்து அவுட் ஸ்விங் செய்தார். ஆனால் குப்தில் அதை சர்வசாதாரணமாக லாங்க்-ஆப் திசையில் சிக்சராக மாற்றினார். எனவே முதல் பந்திலேயே 11 ரன்கள் கிடைத்தது நியூசிலாந்துக்கு. ஒரே பந்தில் 11 ரன்களை வாரி வழங்கினார் ஜான்சன்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போல, அதன்பிறகு ஜான்சன் பந்து வீச்சு மைதானத்தின் நாலாபுறமும் விரட்டியடிக்கப்பட்டது தனிக்கதை.