மும்பை : ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன், இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா குறித்து பேசியுள்ளார். அவர் பும்ரா துவக்கத்தில் இருந்தே தன்னை ஈர்த்து வருவதாக தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி இணையதளத்துக்கு பேட்டி அளித்த ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் பும்ரா பற்றியா பேச்சு எழுந்தபோது, அவரை பற்றி உயர்வாக குறிப்பிட்டுள்ளார். அவருடனான தன் முதல் சந்திப்பு குறித்தும், அப்போதே அவர் தன்னை ஈர்த்துவிட்டதையும் விவரித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இருவரும் ஆடிய போது பயிற்சியில் ஜான்சனுக்கு பந்து வீசியிருக்கிறார் பும்ரா. அப்போது ஷார்ட் பால் வீசிய பும்ரா, ஜான்சனின் ஹெல்மெட்டை தாக்கியிருக்கிறார். அது பற்றி கூறிய ஜான்சன், "அவர் வேகமாக பந்து வீசுகிறார் என நினைத்தேன். அவர் அனைத்தையும் எளிதாக வைத்துக் கொள்கிறார். கடினமான விஷயங்களை முயற்சி செய்வதில்லை" என தெரிவித்தார்.
மிட்சல் ஜான்சன் சில நாட்கள் முன்பு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும், தன் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், பும்ரா இளம் வீரர். தற்போதுதான் சர்வதேச போட்டிகளில், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் கால் வைத்துள்ளார். துவக்கத்தில் இருந்தே பும்ரா அணயின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்டில் கூட அவர் இரண்டாம் இன்னிங்க்ஸில் 5 விக்கெட்கள் எடுத்து அணியின் வெற்றியில் பெரிய பங்காற்றினார். மிட்சல் ஜான்சன் போன்ற ஆதிக்கம் செலுத்திய ஒரு பந்துவீச்சாளர், பும்ராவை பற்றி உயர்வாக பேசுவது நிச்சயம் பெருமையான செய்திதான்.