மும்பை : ஐசிசி உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது கூட ரசிகர்களுக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தவில்லை.
ஆனால் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலக கோப்பையின் மீது கால் வைத்து அமர்ந்திருந்து எடுத்துக் கொண்ட போட்டோ மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை பார்த்து இந்திய ரசிகர்கள் எவ்வாறு நீ அதில் கால் வைக்கலாம் என்று போர் கொடி தூக்கி வருகிறார்கள்.

நாங்கள் இந்த உலக கோப்பையை எப்படி எல்லாம் நினைத்தோம் தெரியுமா? அதில் போய் நீ கால் வைக்கிறாயே என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பண்டிட் கேசவ் என்ற நபர் உலகக் கோப்பை மீது கால் வைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி மிட்செல் மார்ஸ் மீது புகார் கொடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மிச்சல் மார்ஸ் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த புகார் மனுவின் பிரதியை பிரதமர் நரேந்திர மோடிக்கும் அந்த நபர் அனுப்பி வைத்திருக்கிறார். இந்திய ரசிகர்களின் மனதை புண்படுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிச்செல் மார்ஷ் இனி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க கூடாது என்று அவர் அந்த மனுவில் வலியுறுத்தி இருக்கிறார்.
உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் கால் வைத்தது சமூக வலைத்தளத்தில் கலவையால் விமர்சனமே பெற்றது. அது வெறும் கோப்பை என்றும் அதற்கு மரியாதை தேவை இல்லை என்றும் சக மனிதர்களுக்கு தான் நாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் உலக கோப்பைக்கு என்று ஒரு மரியாதை இருக்காதா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் உலக கோப்பையில் மிட்செல் மார்ஸ் கால் வைத்தது தம் மனதுக்கு மிகவும் காயத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி கூறியிருக்கிறார். கிரிக்கெட் வீரர்கள் இதுபோன்ற செயலை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். சாதாரண ஒரு புகைப்படம் எடுத்து தற்போது இந்தியாவில் வழக்குப்பதிவு செய்யும் அளவிற்கு இந்த விஷயம் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.