ராஜ்கோட் : ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் இந்திய அணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடினார்.
குறிப்பாக பும்ரா வீசிய இரண்டு ஓவர்களை குறி வைத்து அவர் அடித்தது இந்திய ரசிகர்களுக்கு கிலியை ஏற்படுத்தியது.

எனினும், அவர் சதம் அடிக்கும் முன் அவரை வெளியேற்றினார் குல்தீப் யாதவ். அவர் ஆட்டமிழந்த போது தவறை உணர்ந்து நொந்து கொண்டே சென்றார்.
என்ன நடந்தது? : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி தட்டையான ஆடுகளம் என பெயர் எடுத்த ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸில் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
எதிர்பார்த்தது போலவே துவக்கம் முதல் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் பவுண்டரிகளை பறக்க விட்டனர். முதல் இரண்டு ஓவர்களில் 7 ரன்கள்தான் எடுத்தனர். ஆனால், மூன்றாவது ஓவரில் பும்ரா பந்துவீச்சை சிதற விட்டார் மிட்செல் மார்ஷ்.
அந்த ஓவரில் மட்டும் மார்ஷ் இரண்டு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து 14 ரன்கள் சேர்த்தார். பும்ரா ஓவரில் ரன் குவித்த உடன் அவரை மாற்றி மற்ற வீரர்களை பந்து வீச வைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. மீண்டும் பும்ரா 23வது ஓவரில் பந்து வீச வந்தார். அப்போதும் மிட்ச் மார்ஷ் மூன்று ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து 19 ரன்கள் சேர்த்தார்.
இப்படி குறி வைத்து பும்ரா ஓவர்களில் மட்டும் 32 ரன்கள் பவுண்டரியில் சேர்த்த மார்ஷ், குல்தீப் யாதவ் வீசிய 28வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரி அடித்து நூறு ரன்களைக் கடக்கலாம் என ஆசைப்பட்டு அடித்தார். அப்போது அவர் 96 ரன்கள் எடுத்து இருந்தார்.
ஆனால், பந்தை பிரசித் கிருஷ்ணா கேட்ச் பிடித்தார். தான் செய்தது தவறு என்பதை சில வினாடிகளில் உணர்ந்த மார்ஷ் "ஆ..ஆ..ஆ.." என கத்தியபடி நடையைக் கட்டினார். அவர் சென்ற பின் ஸ்டீவ் ஸ்மித் அதிரடி ஆட்டம் ஆடி 74 ரன்கள் குவித்தார். முன்னதாக வார்னர் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.