டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு ஸ்டார்க் தற்போது மிகக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். தனது காயம் குறித்துத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஸ்டார்க், இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்திய ஊடகங்களில் உள்ள சில தனிநபர்கள், என்னைப் பற்றியும் எனது காயம் பற்றியும் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். என்னைத் தவிர எனது உடலைப் பற்றி அவர்களுக்கே அதிகம் தெரியும் என்பது போல அவர்கள் பேசி வருகிறார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று சாடியுள்ளார்.

மேலும், "எனது தோள் மற்றும் முழங்கையில் காயம் உள்ளது. இதற்காக நான் தற்போது தீவிரப் பயிற்சியிலும், சிகிச்சையிலும் ஈடுபட்டு வருகிறேன். ஆஸ்திரேலிய கோடைக்காலப் போட்டிகளின் போது இந்தக் காயத்தின் தீவிரம் எனக்குத் தெரியவில்லை. தற்போதுதான் அதன் பாதிப்பு குறித்துத் தெரியவந்துள்ளது" என்று மிட்செல் ஸ்டார்க் விளக்கமளித்துள்ளார்.
முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, ஸ்டார்க்கின் உடற்தகுதி குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியிருந்தார். கடந்த ஜனவரி மாதம் ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு, ஸ்டார்க் கடந்த 2 மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தார் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல், சுனில் கவாஸ்கரும் ஸ்டார்க்கின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், காயம் இல்லாத காரணங்களைக் கூறி ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகும் வீரர்களை ஏலம் எடுக்கக் கூடாது என்று எச்சரித்திருந்தார். இவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே ஸ்டார்க் தற்போது பேசியுள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் ஸ்டார்க் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். சீசனின் தொடக்கத்திலேயே அணியுடன் இருக்க முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாகவும், விரைவில் குணமடைந்து டெல்லி அணியுடன் இணைவேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். முன்னதாக, இந்திய ஊடகங்களின் விமர்சனங்களுக்கு ஸ்டார்க்கின் மனைவியும் ஆஸ்திரேலிய வீராங்கனையுமான அலிசா ஹீலியும் பதிலடி கொடுத்திருந்தார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்னும் ஸ்டார்க்கிற்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்பதும், 2026-27 சர்வதேச போட்டிகளைக் கருத்தில் கொண்டே அவர் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருபுறம் காயம், மறுபுறம் விமர்சனம் என மிட்செல் ஸ்டார்க் விவகாரம் ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.