சிட்னி: இந்திய தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் டக் அவுட் ஆனதும் அவரைப் பார்த்து பேய் போல காட்டுக் கத்தல் போட்ட ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கின் செயல் அநாகரீகமானது என்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் கூறியுள்ளார்.
இதையடுத்து இதுபோல இனிமேல் எனது பந்து வீச்சாளர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார்.

இந்திய வீரர்களை சீண்டிப் பார்ப்பதில் தனி சுகம் கண்டவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். காலம் காலமாக இது நடந்து வருகிறது. நம்மவர்கள் இதைத் தட்டிக் கேட்டால் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டார்கள்.
தற்போதைய ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரிலும் இந்திய வீரர்களை தொடர்ந்து சீண்டியபடியே உள்ளனர் ஆஸ்திரேலியர்கள். விராத் கோஹ்லியுடன் மோதினார்கள். இப்போது முரளி விஜய்யை வம்பிழுத்துள்ளார் மிட்சல் ஸ்டார்க்.
மிட்சல் ஜான்சன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் அவருக்குப் பதில் ஸ்டார்க்கை சேர்த்துள்ளனர். அவரும் தன் பங்குக்கு வெறித்தனத்தைக் காட்டி வருகிறார்.
நேற்றைய ஆட்டத்தின்போது தொடக்க ஆட்டக்காரர் முரளி தனது முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி விட்டார். நல்ல பார்மில் உள்ள வீரர் முரளி என்பதால் அவர் அவுட்டானது ஸ்டார்க்குக்கு வெறியைக் கூட்டி விட்டது போல. உடனே முரளி விஜய் எதிரே போய் நின்று பேய்த்தனமாக கத்தி வெளியேறு என்று சொல்து போல சவுண்டு விட்டார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
ஸ்டார்க்கின் இந்த "நாகரீகமான" செயலைப் பார்த்து அமைதியாகவும், அதேசமயம் இறுக்கமான முகத்துடனும் முரளி விஜய் பெவிலியன் திரும்பினார்.
ஸ்டார்க்கின் செயலுக்கு உடனடியாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கண்டனம் தெரிவித்தார். இது அநாகரீகமானது, தவறானது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்கள் இதுகுறித்து கேப்டன் ஸ்மித்திடம் கேட்டனர். அதற்கு அவர் ஸ்டார்க் நடந்து கொண்ட விதம் பற்றி நடுவர்கள் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இப்போதைக்கு இது ஒரு பிரச்சினையாக எழவில்லை.
ஆனால், விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடுகையில், பேட்ஸ்மேனை வெளியே செல் என்று கூறுவது போல் நடந்து கொள்வது விளையாட்டின் உத்வேகத்திற்கு அழகல்ல. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், விஜய் ஆட்டம் இழந்ததும் நான் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்ததால், ஸ்டார்க் எப்படி நடந்து கொண்டார் என்பதை பார்க்கவில்லை.
இருப்பினும் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழக்கும் போது எங்களது பவுலர்கள் அமைதியுடன் நடந்து கொள்வார்கள் என்று உறுதி அளிக்கிறேன் என்றார் அவர்.
என்ன கொடுமை என்றால் நம்மவர்களை தற்போதைய தொடரில் அதிகம் சீண்டிப் பார்ப்பது ஐபிஎல் போட்டிகளின்போது இங்கு வந்து விளையாடும் வீரர்கள்தான் என்பதே!