அணியில் மிதாலி இல்லை
மகளிர் உலக டி20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் அணியில் இடம் பெறவில்லை. இது ரசிகர்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
கேப்டன் காரணம் இல்லை
இதையடுத்து, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் மிதாலி இடையே உள்ள உரசல் தான் காரணம் என செய்திகள் வந்தன. ஆனால், இப்போது கேப்டன் காரணம் அல்ல பயிற்சியாளர் ரமேஷ் போவார் தான் காரணம் என பிசிசிஐக்கு எழுதியுள்ள கடிதத்தில் கண்ணீர் மல்க நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார் மிதாலி.
ரமேஷ் போவார் தான் காரணம்
தன் கடிதத்தில் பயிற்சியாளர் ரமேஷ் போவார் தான் தன்னை அரையிறுதி போட்டியில் ஆடவிடாமல் செய்தது என குறிப்பிட்டுள்ளார். அந்த முடிவை கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஒப்புக்கொண்டது மட்டுமே ஹர்மன்ப்ரீத் மேல் தனக்கு உள்ள ஒரே வருத்தம். அவருடன் எனக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். ரமேஷ் போவார் என்ன எல்லாம் செய்தார் என விவரித்துள்ளார் மிதாலி.
ஓரங்கட்ட முயற்சி
மகளிர் உலக டி20 தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் சென்றதில் இருந்து ரமேஷ் போவார் தன்னை ஓரங்கட்ட முயற்சி செய்ததாக குறிப்பிட்டுள்ளார் மிதாலி. எப்போதும் துவக்கத்தில் களம் இறங்கும் மிதாலியை மிடில் ஆர்டரில் இறங்குமாறு கூறியுள்ளார். அப்படி இறங்கிய நியூசிலாந்து போட்டியில் இந்தியாவின் துவக்கம் சரியாக அமையவில்லை.
மிடில்-ஆர்டரில் இறங்குங்கள்
அடுத்த போட்டியிலும் மிடில்-ஆர்டரில் களம் இறங்குமாறு ரமேஷ் கூற, மிதாலி தேர்வாளர்களிடம் இது பற்றி பேசி மீண்டும் துவக்கத்தில் களம் இறங்கினார். அடுத்த இரண்டு போட்டிகளில் மிதாலி அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால், இதை ரமேஷ் விரும்பவில்லை என தெரிகிறது.
விலகினார்
இதனால், வலை பயிற்சியில் மிதாலி ஈடுபட்டால் அங்கே இருந்து விலகி செல்வது, மிதாலி பேச வந்தால் போனை பார்த்துக் கொண்டே விலகுவது, என இருந்துள்ளார் ரமேஷ். இது எல்லை மீறி செல்வதை கண்ட மிதாலி ராஜ், மன உளைச்சலுக்கு ஆளாகியதோடு அணி மேலாளரோடு பேச, மேலாளர் ரமேஷ் மற்றும் மிதாலியை அழைத்து சமாதானம் செய்து வைத்துள்ளார். அப்போது தான் தான் தவறு செய்தேன் என ஒப்புக் கொண்டுள்ளார் ரமேஷ்.
வெளியே வர வேண்டாம்
எனினும், அதன் பின் இன்னும் மோசமாக நடந்து கொண்டுள்ளார் ரமேஷ். அயர்லாந்து போட்டியில் மிதாலிக்கு சிறிய காயம் ஏற்பட ஒரு நாள் ஓய்வில் இருந்துள்ளார். அடுத்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிக்கு மிதாலி தயாராகவே இருந்துள்ளார். எனினும், போட்டி துவங்கும் முன் ரமேஷ் போவார் மிதாலியை அறையை விட்டு வெளியே வர வேண்டாம். செய்தியாளர்கள் இருப்பார்கள் என கூறி உள்ளார்.
ஆட விடாமல் சதி
இதை வைத்து, தன்னை ஆஸ்திரேலியா போட்டியில் ஆட விடாமல் செய்யப் போகிறார் என்பதை ஊகித்த மிதாலி, அணி மேலாளரிடம் தனக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. தான் விளையாட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். அப்போது ரமேஷ் மீண்டும் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என கூறியுள்ளார். இது போன்ற அறிவிப்புகள் எப்போதும் மேலாளரிடம் இருந்து தான் வரும். ஆனால், பயிற்சியாளர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என புரியாத நிலையில் இருந்துள்ளார் மிதாலி.
சிறை வைத்தார்
ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றி பெற்ற உடன் மிதாலி இப்போது வேண்டுமானால் வரச் சொல்லுங்கள் என கூறியுள்ளார் ரமேஷ். தன்னை போட்டியில் ஆடவிடாமல் செய்ய இப்படி சிறை வைத்து இருக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார் மிதாலி.
திட்டம் போட்டு செய்துள்ளார்
ஆஸ்திரேலியா போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பின் அடுத்து அரையிறுதிப் போட்டியில் ஆட வேண்டிய நிலையில், மிதாலி அணியில் தானும் இடம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார். எனினும், மிதாலி அணியில் இல்லாத விஷயத்தை மிதாலியை தவிர அனைவரிடமும் கூறியுள்ளார் ரமேஷ். அரையிறுதியில் டாஸ் போடும் முன்பே தான் அணியில் இல்லாத விஷயம் மிதாலிக்கு தெரிந்துள்ளது. இவ்வாறு, திட்டம் போட்டு தன்னை அவமானப்படுத்தி, அணியையும் அரையிறுதியில் வெல்ல விடாமல் செய்துள்ளார் ரமேஷ் போவார் என குற்றம் சுமத்தியுள்ளார் மிதாலி.