
19 ஆண்டுகள் கிரிக்கெட்
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டி மிதாலி ராஜ்-இன் 200வது போட்டி ஆகும். தற்போது 36 வயதாகும் மிதாலி ராஜ், இதுவரை 19 ஆண்டுகள் 219 நாட்கள் சர்வதேச கிரிக்கெட் ஆடியுள்ளார்.

ஆச்சரிய தகவல்
மிதாலி ராஜ் ஜூன் 25, 1999 அன்று ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா இதுவரை 263 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதில் மிதாலி அறிமுகம் ஆன பின் 213 போட்டிகளில் இந்தியா ஆடியுள்ளது. அந்த 213 போட்டிகளில் மிதாலி 200 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது ஆச்சரியமான தகவல் ஆகும்.

சாதனையை முந்த முடியுமா?
மிதாலிக்கு அடுத்து இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸ் 191 போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் 2016இல் ஓய்வு பெற்று விட்டதால், மிதாலி ராஜின் சாதனையை முந்த வாய்ப்புள்ள அடுத்த வீராங்கனை இந்தியாவின் மற்றொரு மூத்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ஆவார். ஜூலன் 174 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

அதிக ரன்கள், போட்டிகள்
200 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள மிதாலி ராஜ் 6622 ரன்கள் அடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தற்போது அதிக போட்டிகளில் ஆடியவரும், அதிக ரன்கள் குவித்தவரும் மிதாலி ராஜ் தான். 100 போட்டிகளுக்கு மேல் ஆடியவர்களில் அதிக சராசரி கொண்டவரும் இவரே.

மிதாலி அதிக அரைசதம்
இந்த 200 போட்டிகளில் 180 இன்னிங்க்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள மிதாலி ராஜ் 7 சதம் மற்றும் 52 அரைசதம் அடித்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்துள்ளவரும் மிதாலி ராஜ் தான்.

அதிக போட்டிகளில் கேப்டன்
இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் மிதாலி ராஜ் அதிலும் சாதனை செய்துள்ளார். இதுவரை 123 போட்டிகளில் தலைமையேற்றுள்ள மிதாலி, சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்து சாதித்துள்ளார்.

9 ரன்களில் ஆட்டமிழந்தார்
மிதாலி ராஜ் 1999இல் அயர்லாந்து அணிக்கு எதிரான தன் அறிமுக போட்டியில் சதம் அடித்து (114* ரன்கள்) அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார. ஆனால், தன் 200வது போட்டியில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து சிறிய ஏமாற்றம் அளித்தார்.

ஆடவர் - மகளிர் கிரிக்கெட்
ஆடவர் கிரிக்கெட்டில் நேற்று ரோஹித் சர்மா தன் 200வது ஒருநாள் போட்டியில் ஆடினார். அவர் இந்தியாவில் மட்டும் 200 ஒருநாள் போட்டிகளில் ஆடிய 14வது வீரர் ஆவார். உலகளவில் சுமார் 70க்கும் மேற்பட்ட வீரர்கள் 200+ போட்டிகளில் ஆடியுள்ளனர்.

மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறை
ஆனால், மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு வீராங்கனை 200 போட்டிகளில் ஆடியுள்ளார். அவரும் ஒரு இந்தியர் என்பது பெருமை அளிக்கும் விஷயமாக உள்ளது. ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஆடியவர்கள் இந்தியர்களே. சச்சின் (463 போட்டிகள்), மிதாலி ராஜ் (200* போட்டிகள்) எடுத்து ஆடவர் - மகளிர் கிரிக்கெட்டில் முதல் இடத்தில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
