டி 20 கேப்டன்
2012 (இலங்கை), 2014 (வங்கதேசம்) மற்றும் 2016 (இந்தியா) ஆகிய 3 பெண்கள் டி 20 உலக கோப்பைகள் உட்பட 32 டி 20 போட்டிகளில் இந்தியாவை கேப்டனாக இருந்து வழி நடத்தியவர். அதாவது, 2006ம் ஆண்டில் டெர்பியில் இந்தியா தனது முதல் பெண்கள் டி 20 சர்வதேச போட்டியில் விளையாடியபோது மிதாலி ராஜ் தான் கேப்டன்.
கடைசியாக விளையாடினார்
89 டி 20 சர்வதேச போட்டிகளில், மிதாலி இதுவரை 17 அரைசதங்கள் உட்பட 2,364 ரன்கள் குவித்துள்ளார். இதில் 97 (நாட் அவுட்) அவரது சிறந்த ஆட்டமாகும். அவர் தமது கடைசி டி 20 போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் 9ம் தேதி 2019ம் ஆண்டு விளையாடினார். இப்போட்டியில் 32 பந்துகளில் 30 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார்.
கோச்சுடன் மோதல்
கடந்த வருடம், மகளிர் டி20 உலக கோப்பை போட்டியின் போது, பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாருடன், மிதாலி ராஜுக்கு மோதல் ஏற்பட்டது. அரையிறுதியில் விளையாடிய இந்திய அணியில் மிதாலி ராஜ் உள்ளிட்ட மூத்த வீராங்கனைகள் சிலர் சேர்க்கப்படாததால் சர்ச்சை எழுந்தது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது மிதாலி குற்றம் சாட்டினார்.
2 பிரிவுகள்
போட்டி முடிவடைந்த பிறகு ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. எனினும், மகளிர் அணி வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிந்து ஒரு தரப்பு ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பு புதிய பயிற்சியாளரை நியமிக்கவும் வலியுறுத்தியது.
எழுந்த சிக்கல்
பிறகு, டபிள்யூ வி ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்தச் சர்ச்சைக்கு பிறகு 4 டி 20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார் மிதாலி ராஜ். எனினும் அவர் அணியில் தொடர்ந்து நீடிப்பது பெரிய சிக்கலாக இருந்தது. புதிய வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்கிற கருத்துகள் ஏற்பட்ட நிலையில் திடீரென டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் மிதாலி ராஜ்.
ரசிகர்கள் பட்டாளம்
மிதாலிக்கு என இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகளையும் மிதாலி வென்றுள்ளார். தொடக்க காலத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாட ஏகப்பட்ட தடைகள் இருந்தன. ஆனால், அவற்றை திறம்பட எதிர் கொண்டு பலருக்கு சிறந்த முன்னுதாரணமாக இருப்பவர் மிதாலி ராஜ்.