மும்பை: பிசிசிஐயின் புதிய தலைவராக மிதுன் மன்ஹஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்தப் பொறுப்பை வகித்த ரோஜர் பின்னி கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில், பிசிசிஐயின் துணை தலைவரான ராஜூவ் சுக்லா, அந்தப் பதவியை தற்காலிகமாக செயல்பட்டார்.
இந்த தருணத்தில் பிசிசிஐயின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹஸ் பிசிசிஐயின் 37-வது தலைவராக பதவி வகித்திருக்கின்றார். இதைப் போன்று துணைத் தலைவராக ராஜுவ் சுக்லாவும், பிசிசிஐ செயலாளரான தேவஜித் சாய்க்காவும் தொடர்கின்றனர்.

பிசிசிஐ பொருளாளராக பிரதீப் சிங் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ளது குறித்து பேசிய மிதுன் மன்ஹஸ், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தாம் பொறுப்பேற்று இருப்பது மிகவும் கௌரவமாக கருதுகின்றேன். இது மிகப்பெரிய பொறுப்பு. என்னுடைய சிறந்த செயல்பாட்டையும், முழு உத்வேகத்துடனும் முழு மனதுடன் என் பணியை சிறப்பாக செய்வேன் என்று நான் நம்பிக்கை கொள்கின்றேன்.
நான் காஷ்மீர் கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவராக இருந்த போது பல கிரிக்கெட் வீரர்களுக்கு உறுதுணையாக இருந்தேன். அதில் என்னுடைய பணி சிறப்பாக இருந்ததை பார்த்து எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கலாம் என்று மிதுன் மன்ஹஸ் கூறியுள்ளார். 46 வயதான மிதுன் மன்ஹஸ், 20 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார்.
157 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 9714 ரன்களை அடித்திருக்கிறார். இதேபோன்று லிஸ்ட் ஏ போட்டியில் 13 ஆட்டங்களில் விளையாடி 4126 ரன்களையும், 91 டி20 போட்டிகளில் விளையாடி 1170 ரன்களையும் அடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மிதுன் மன்ஹஸ் ஓய்வு பெற்றார். மிதுன் மன்ஹஸ் வங்கதேச அண்டர் 19 அணி கிங்ஸ் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி, குஜராத் அணிகளில் பேட்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டு இருக்கிறார்.
இதேபோன்று இந்திய அணியை தேர்வு செய்யும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரக்யான் ஓஜா மற்றும் ஆர்பி சிங் ஆகியோர் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இதைப் போன்று பிசிசிஐயின் உயர் மட்ட குழுவில் முன்னாள் சௌராஷ்டிரா கேப்டன் ஜெய்தேவ் ஷ நியமிக்கப்பட்டிருக்கின்றார். இதேபோன்று மகளிர் இந்திய அணியை தேர்வு செய்யும் குழு தலைவராக இருந்த நித்து டேவிட் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அமிதா சர்மா அந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.