டல்லாஸ்: சியாட்டல் ஆர்காஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிளே ஆஃப் சுற்றிலும் எலிமினேட்டர் போட்டியில் டிஎஸ்கே அணியை எதிர்த்து மும்பை நியூயார்க் அணி விளையாடவுள்ளதால், சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
மேஜர் லீக் தொடரின் கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் தம்பி என்று சொல்லப்படும் டிஎஸ்கே அணியை எதிர்த்து சியாட்டல் ஆர்காஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டிஎஸ்கே அணிக்கு கான்வே - டூ பிளஸிஸ் தொடக்கம் கொடுத்தனர். முதல் பந்திலேயே கான்வே டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில், தொடர்ந்து வந்த ஜோஷ்வா 6 ரன்களில் வெளியேறினார். இதன்பின் கேப்டன் டூ பிளஸிஸ் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 39 ரன்களை விளாசினார்.

பின்னர் வந்த வீரர்களில் மிலிந்த் குமார் 29 ரன்களும், சாவேஜ் 27 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 45 ரன்களை விளாசினார். இதன் மூலமாக டிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை குவித்தது. சியாட்டல் ஆர்காஸ் அணி தரப்பில் கீமோ பால் மற்றும் அயான் தேசாய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய சியாட்டல் ஆர்காஸ் அணிக்கு ரிக்கல்டன் - டி காக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
எப்படி டிஎஸ்கே அணி முதல் பந்திலேயே கான்வே விக்கெட்டை பறிகொடுத்ததோ, அதேபோல் சியாட்டல் ஆர்காஸ் அணியும் பார்ட்மேன் வீசிய முதல் ஓவரின் ரிக்கல்டன் விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் வந்த வீரர்களில் டி காக் 26 ரன்களும், ஜெயசூர்யா 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இறுதியாக 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் டிஎஸ்கே அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடிய டிஎஸ்கே அணி 3 வெற்றி, 2 தோல்வி ஆகியவையுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நிறைவு செய்தது. இதன் காரணமாக நாளை நடக்கவுள்ள எலிமினேட்டர் போட்டியில் மும்பை நியூயார்க் அணியை எதிர்த்து டிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இதனால் இந்திய ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர்.