சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றில் முதல்முறையாக புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்து சோகமான முடிவை பெற்றது. இதற்கு காரணம் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிய அளவு சாதிக்கவில்லை என்பதுதான்.
சிஎஸ்கே அணி பெரிதும் நம்பி இருந்த ரச்சின் ரவீந்திரா, கான்வே ஆகியோர் பேட்டிங்கில் தடுமாறினர். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அபாரமாக விளையாடினார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கெத்து காட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரச்சின் ரவிந்த்ரா ஐபிஎல் 2025ஆம் சீசனில் வெறும் எட்டு போட்டிகளில் விளையாடி 191 ரன்கள் மட்டும்தான் எடுத்திருந்தார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். அவருடைய சராசரி 27 என்ற அளவில் இருந்ததும் ஸ்டிரைக் ரேட் 128 என்ற அளவில் தான் இருந்தது.
இதேபோன்று மற்றொரு சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான கான்வே, நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 156 ரன்கள் தான் அடித்து இருந்தார். இதில் அவருடைய சராசரி 26 ஆகும். கான்வே, இரண்டு அரை சதம் அடித்திருந்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 131 என்ற அளவில் இருந்தது.
இப்படி சிஎஸ்கே அணி நம்பிய வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் காலை வாரிய நிலையில், தற்போது ஐபிஎல் தொடர் முடிந்து பத்து நாட்கள் மேல்தான் ஆகிறது. ஆனால் அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி தொடரில் இந்த வீரர்கள் சென்று அதிரடியாக ஆடி இருப்பது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும்போது பேட்டிங்கே தெரியாது என்பது போல் ஆடிய ரச்சின் ரவீந்தரா நேற்று வாஷிங்டன் பிரீடம் அணிக்காக விளையாடிய போது 5 சிக்சர், இரண்டு பவுண்டரி என 17 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். இதை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் இதுபோன்ற ஒரு ஆட்டத்தை சிஎஸ்கேவுக்காக விளையாடி இருந்தால் நாம் வெற்றி பெற்று இருக்கலாம் என்று கூறி வந்தனர்.
இதேபோன்று கான்வே இன்று டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்க வீரராக ஆடினார். இதில் 44 பந்துகள் எதிர்கொண்ட அவர் 66 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து சிக்சர், இரண்டு பவுண்டரி அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 150 என்ற அளவில் இருந்தது. எனினும் கான்வே கூட,சிஎஸ்கே அணியின் சகோதர அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் இந்த ஆட்டத்தை ஆடினார். ஆனால் ரச்சின், சிஎஸ்கேவுக்கு சம்பந்தமே இல்லாத அணிக்கு தற்போது அபாரமாக ஆடியிருக்கிறார்.