கவுகாத்தி: 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவின் கவுகாத்தி மற்றும் சில்லாங்கில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நேற்று மாலை கவுகாத்தி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அசாம் முதலமைச்சர் தருண் கோகாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய அணியை பேட்மிண்டன் சவுரவ் கோசல் தேசிய கொடியை ஏந்தியவாறு வழிநடத்தி சென்றார். அப்போது வீரர்கள் பிரதமரை பார்த்து உற்சாகமாக கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பதிலுக்கு பிரதமரும் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதில் கவுகாத்தியில் 16 வகையான போட்டிகளும், ஷில்லாங்கில் 7 வகையான போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவு, பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
தடகளம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், கால்பந்து, கைப்பந்து, ஆக்கி, நீச்சல், மல்யுத்தம், கபடி, ஸ்குவாஷ், டென்னிஸ், ஹேண்ட்பால், வில்வித்தை உள்பட 23 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 228 பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் 245 வீராங்கனைகள் உள்பட 521 பேர் இடம் பிடித்துள்ளனர். வரும் 16 ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
தெற்காசிய போட்டிகள் 2010ம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடைபெற்றது. 2012ம் ஆண்டு டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்ட இந்த போட்டி சட்டமன்ற தேர்தல் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்க இடைநீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை தள்ளிப்போனது.