லண்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து மொயின் அலி நீக்கப்பட்டுள்ளார். முதல் ஆஷஸ் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தும் மொயின் அலி நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து அணியின் தோல்விக்கு, முதல் இன்னிங்ஸின் போது முதல் நாளிலேயே டிக்ளேர் செய்ததே காரணமாக பார்க்கப்பட்டது. அதேபோல் ஆண்டர்சனின் பந்துவீச்சு எடுபடாததும் மறைமுக காரணமாக அமைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டத்திற்கு ஆஸ்திரேலிய அணி தரமான பதிலடி கொடுத்துள்ளதாக ஆஸி. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் ராபின்சனை ஆஸி. அணியின் முன்னாள் வீரர்கள் தொடர்ந்து காட்டமாக விமர்சித்து வருகின்றனர். இதன் மூலம் முதல் போட்டியில் அடைந்த வெற்றியின் காரணமாக, ஆஸி. அணி உளவியல் தாக்குதலையும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் ஆஷஸ் தொடரின் 2வது போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் 2வது போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இருந்து மொயின் அலி மட்டுமே நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஜோஷ்வா டங்க் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்துவீச்சாளருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளரை இங்கிலாந்து அணி சேர்த்துள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் அயர்லாந்து அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜோஷ்வா டங்க், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். லார்ட்ஸ் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதோடு, ஜோ ரூட்டை ஸ்பின்னராக பயன்படுத்தும் திட்டத்தோடு இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. ஓய்வில் இருந்த மொயின் அலியை மீண்டும் இங்கிலாந்து அணிக்கு அழைத்து வந்து ஒரேயொரு போட்டியுடன் நீக்கியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.