
சூர்யகுமாரின் அதிரடி
இந்திய அணியின் பேட்டிங்கில் ஒரு சில சமயங்களில் கோலி போன்ற வீரர்களே சொதப்பிய போதும், சூர்யகுமார் யாதவ் மட்டும் தூண் போன்று நிலைத்து நின்று ஆடுகிறார். அதுவும் பேட்டிங்கிற்கு கடினமான களங்களில் அனைவரும் தடுமாறும் போது இவர் மட்டும் ஏதோ வீடியோ கேம் ஆடுவது போன்று வாண வேடிக்கை காட்டி வருகிறார். இவர் இங்கிலாந்தையும் விட்டு விளாச வாய்ப்புள்ளது.

சுலபமான அணி
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, 31/3 என தடுமாறியது. அப்போது ஒற்றை ஆளாக போராடிய சூர்யகுமார் மட்டும் 55 பந்துகளில் 117 ரன்களை விளாசினார். ஒரு பவுலரை கூட அவர் விட்டு வைக்காமல் அச்சுறுத்தல் கொடுத்தார். அந்த போட்டியில் இந்தியா தோற்றபோதும், சூர்யகுமாரின் இன்னிங்ஸ் பேசப்பட்டது.

மொயீன் அலி கருத்து
இந்நிலையில் இவரை சமாளிப்பது குறித்து இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் மொயீன் அலி பேசியுள்ளார். அதில், சொந்த மண்ணிலேயே எனது பவுலிங்கை அவர் நாசம் செய்துவிட்டார். நல்ல வேளையாக கடும் முயற்சி செய்து அவரை அவுட்டாக்கினோம். அவருடைய சில ஷாட்கள் என் வாழ்விலேயே நான் பார்த்த சிறந்த ஷாட்களாகும்.

பந்துவீசக்கூடாது
என்னிடம் யாராவது, நீ யாருக்கு பந்துவீசக்கூடாது எனக்கேட்டால், நான் சூர்யகுமார் யாதவை தான் முதலில் சொல்வேன். அவர் சிறப்பாக விளையாடும் போது பலவீனத்தை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது. எங்களை சொந்த மண்ணிலேயே துவம்சம் செய்த சூர்யகுமார்,இங்கு என்ன செய்யப்போகிறார் எனத் தெரியவில்லை என மொயீன் அலி புலம்பினார்.


Click it and Unblock the Notifications











