டாக்கா: வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை (BCCI) இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மொயீன் அலி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். "ஐசிசி ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. அதை உண்மையில் இயக்குபவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும்" என்று அவர் கூறி இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஐபிஎல் தொடருக்காகக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ. 9.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், பிசிசிஐ உத்தரவின் பேரில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலைக் கண்டித்து சில இந்திய அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் முஸ்தபிசுர் ரஹ்மான் இந்தியா விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதை அடுத்து பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது.

தற்போது வங்கதேச பிரிமியர் லீக் (BPL) தொடரில் சில்ஹெட் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி, 'பிடிநியூஸ்24' (bdnews24) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் முஸ்தபிசுருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
"முஸ்தபிசுருக்காக நான் மிகவும் வருந்துகிறேன். பல வருடங்களாகத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டதால்தான் அவருக்கு அந்த ஒப்பந்தம் கிடைத்தது. ஒரு வீரரின் மிகப்பெரிய வாய்ப்பு அரசியல் காரணங்களுக்காகப் பறிக்கப்படுவது வேதனைக்குரியது" என்று அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர வங்கதேசம் மறுப்பதையும், இடமாற்றக் கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததையும் மொயீன் அலி கடுமையாகச் சாடியுள்ளார். ஐசிசி தலைவராகப் பதவியேற்றுள்ள ஜெய் ஷாவையும், பிசிசிஐ-யையும் மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
மொயீன் அலி கூறுகையில், "ஐசிசி ஒருபோதும் நடுநிலையான அமைப்பாக இருந்ததில்லை. ஆனால் இதைப் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. ஏனென்றால், ஐசிசி-யை உண்மையில் யார் இயக்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "இது மிகவும் வருத்தத்துக்குரியது. இது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. பாகிஸ்தான் இதை அனுபவிக்கிறது, இப்போது வங்கதேசம் இதை எதிர்கொள்கிறது. ஆனால் ஐசிசி எதையும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது" என்று அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்காக இந்தியா வர வங்கதேசம் மறுப்பது குறித்தும் அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். "வங்கதேசம் இந்தியா வர மறுப்பதாகச் செய்திகளைப் படித்தேன். அதற்காக நான் வங்கதேசத்தைக் குறை சொல்ல மாட்டேன். அரசியலைக் கிரிக்கெட்டுக்குள் கொண்டு வருபவர்கள்தான் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள். ஆசிய நாடுகளில் மக்கள் கிரிக்கெட்டை உயிராக நேசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் நட்சத்திரங்கள் விளையாடுவதைப் பார்க்கவே விரும்புவார்கள்" என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
கால்பந்து உலகைப் போலக் கிரிக்கெட்டும் மாறக்கூடும் என்றும், ஐசிசி தொடர்களை விட ஃப்ராஞ்சைஸ் லீக் போட்டிகளே இனி ஆதிக்கம் செலுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஐசிசி மீதான மொயீன் அலியின் இந்த நேரடித் தாக்குதல் கிரிக்கெட் அரங்கில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.