நெருங்கும் உலக கோப்பை.. பிசிசிஐ...! மொகாலியை மனசில வச்சுக்குங்க... அலர்ட்டாகுங்க
Recommended Video

மொகாலி:உலக கோப்பை அணி தேர்வு விஷயத்தில் மறு பரிசீலனை அவசியம் என்பதை ஆஸிக்கு எதிரான 4 வது ஒருநாள் போட்டி உணர்த்தி உள்ளது.
மொகாலியில் நடைபெற்ற 4-வது போட்டியில், டாஸ்வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சிகர் தவான் 143 ரன்குவித்தார். ரோஹித் சர்மா 95 ரன்கள் சேர்த்தார்.
இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47 புள்ளி 5 ஓவரில் 359 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணியின் ஹான்ட்ஸ்காம்ப் 117 ரன்கள் குவித்தார். வெற்றிக்கு காரணமாக டர்னரின் அதிரடி ஆட்டம் இருந்தது.

பிசிசிஐ உணரவேண்டும்
உலக கோப்பை போட்டிக்கு ஏறக்குறைய அணியை தேர்வு செய்துவிட்டோம் என்று மகிழ்ந்த பிசிசிஐ தற்போது மொகாலி போட்டியை மனதில் வைத்து விழித்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. உலக கோப்பைப் போட்டிக்கு முன்பாக இப்படி ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், வீரர்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய இக்கட்டான நேரத்தில் தேர்வுக்குழு உள்ளது.

மைதானங்கள்
அதிலும், இங்கிலாந்தில் இருக்கும் ஆடுகளங்கள் அனைத்தும் நல்ல ஸ்கோர் செய்யக்கூடிவை. அந்த மைதானங்களில் இப்படி மோசமான பந்துவீசினால் அவ்வளவு தான்.

தரமான பீல்டிங்
பீல்டிங்கிலும் சொதப்பக் கூடாது. இது ரெண்டில் எது நடந்தாலும் லீக் ஆட்டத்தோடு இந்தியா பெட்டி, படுக்கைகளை எடுத்து கொண்டு ஊர் திரும்ப வேண்டியது தான்.

தொடரும் ஆட்டங்கள்
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து தொடரிலிருந்து தொடர்ச்சியாக வீரர்கள் கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இந்த தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் போட்டி அவர்களுக்காக காத்திருக்கிறது.

சலிப்பு ஏற்படும்
தொடர்ந்து போட்டிகளில் ஐக்கியமாகி இருப்பது பெரும் சலிப்பை ஏற்படுத்தும். அதுவே முக்கியமான உலக கோப்பை தொடரின் போது சோர்வை ஏற்படுத்தும். எனவே.. வீரர்களுக்கு ஓய்வு அவசியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மனச்சோர்வு கூடாது
வணிகம் மட்டுமே பிரதானம் என்று பிசிசிஐ கருதினால், உலக கோப்பையை ஒட்டுமொத்தமாக மறந்துவிட வேண்டியதுதான். ஆகையால், வீரர்களை மனச்சோர்வு அடையாமல் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

சேஸிங் சாதனை
358 ரன்கள் என்பது நிச்சயம் இந்தியா நிர்ணயித்த மிகப்பெரிய இலக்கு. ஆனால்.. அதையே சேஸிங் செய்து ஆஸி மிரள வைத்திருக்கிறது. இது நிச்சயம் தரமான சாதனைதான்.

முறியடித்த ஆஸி.
அதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக 334 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா சேஸ் செய்திருந்தது. அதையும் முறியடித்து, தற்போது ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறது.

தோல்வியில் மீண்டது
ஒரு ஆட்டம் கையைவிட்டு போனாலும்.. தொடரில் தோல்வி என்பதை உணர்ந்த ஆஸ்திரேலியா... போட்டியை தற்போது தமது பக்கம் திருப்பி வைத்திருப்பது அவ்வளவு எளிதானது அல்ல. மிகுந்த மனத்துணிவுடன் அவர்கள் நிச்சயம் உலக கோப்பையை அணுகுவார்கள்.

புத்துணர்வு அவசியம்
அத்தகைய நடைமுறையை இந்திய கிரிக்கெட் வாரியம் பின்பற்ற வேண்டும். சொந்த மண்ணில் நிறைய ரன்கள் அடித்தும் தோல்வியை பரிசாக வாங்கி இருப்பதால், முதலில் வீரர்களை புத்துணர்வு படுத்த வேண்டும்.

உலக கோப்பை தொடர்
அடுத்து.. உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் ஆஸி. தொடருக்கு எதிரான மைனஸ்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் உலக கோப்பையில் இந்தியா எதிர்கொள்ளும் ஒவ்வொரு ஆட்டமும் நமக்கு மொகாலியை நினைவுபடுத்தும்.


Click it and Unblock the Notifications