கொந்தளிப்பு.. "இந்தியாவின் பெர்த்" மொகாலி மைதானத்தில் உலக கோப்பை போட்டி ஏன் இல்லை? பிசிசிஐ விளக்கம்
மும்பை: இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மைதானங்களில் மொஹாலி மைதானம் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அக்.5ல் தொடங்கி நவ.19ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடையவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பை தொடரில், மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக 10 மைதானங்கள் ஐசிசி மற்றும் பிசிசிஐ-யால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, தரம்சாலா, புனே, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் பிரபலமான மைதானங்களில் ஒன்றான மொஹாலி மைதானம் தேர்வு இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி சாதித்தது.
அதேபோல் பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஏராளமான போட்டிகள் மொஹாலியில் நடைபெற்றுள்ளன. இன்னும் சொல்லப் போனால் மொஹாலி மைதானம் இந்திய அணிக்கு ராசியான மைதானமாக பார்க்கப்படுகிறது. அண்மையில் கூட விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி மொஹாலி மைதானத்தில் தான் நடைபெற்றது. இதனால் மொஹாலி மைதானத்தில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறாததற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
பஞ்சாப் விளையாட்டுத்துறை அமைச்சர் குர்மீத் சிங் கூறுகையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதல் போட்டி, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. அனைத்துமே முக்கியமான போட்டிகள் தான். அதேபோல் அருகில் இருக்கும் தரம்சாலா மைதானத்தில் 5 உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவுள்ளது. ஆனால் மொஹாலியில் ஒரு போட்டி கூட இல்லை.
ரசிகர்களுக்கான ஹோட்டல்கள், விமான நிலையங்கள் என்று அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மொஹாலியில் உள்ளது. அரசியல் காரணங்களால் மொஹாலி மைதானம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், மொஹாலி மைதானம் தேர்வு செய்யப்படாதது குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியை நடத்தும் வாய்ப்பு மொஹாலி மைதானத்திற்கு வழங்கப்பட்டது. மொஹாலியில் முல்லன்பூர் மைதானம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. அதனால் மட்டுமே மொஹாலியில் உலகக்கோப்பை ஆட்டம் நடத்த முடியவில்லை. தற்போது மொஹாலியில் உள்ள மைதானம் ஐசிசியின் தரத்தில் இல்லை.
மைதானங்களை தேர்வு செய்வதில் ஐசிசியின் கருத்துகள் முக்கியமானது. முதல்முறையாக பயிற்சி போட்டிகளை திருவனந்தபுரத்தில் நடத்த உள்ளோம். அதேபோல் வடகிழக்கு மாநிலங்களில் கவுகாத்தியில் பயிற்சி ஆட்டங்கள் நடக்கவுள்ளது. மைதானங்களை தேர்வு செய்வதற்கு முன் அனைத்து மைதானங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இறுதி முடிவை ஐசிசி தான் எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications