இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமீர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தனது 17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, அனைத்து பேட்ஸ்மேன்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்தான் முகமது ஆமிர்.
பந்தை வேகமாக வீசுவதிலும், ஸ்விங் செய்வதிலும் வல்லவராக இருந்தார் முகமது ஆமீர். ஆனால், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ஓராண்டு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டு மோசமான நிலையையும் அடைந்தார். தற்போது 32 வயது ஆகும் நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

2020 ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற வேண்டி தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக் கொண்டார். டி20 உலக கோப்பை முடிந்த பின் அவருக்கு பாகிஸ்தான் அணியில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதை அடுத்து தற்போது மீண்டும் ஓய்வை அறிவித்து இருக்கிறார். முகமது ஆமீர் தனது துவக்க காலத்தில் துல்லியமாக பந்து வீசுவதில் வல்லவராக இருந்தார். பாகிஸ்தான் அணி 2009 டி20 உலகக் கோப்பையை வென்றதில் முகமது ஆமீருக்கு முக்கிய பங்கு உள்ளது.
அதன் பின் 2010 ஆம் ஆண்டு ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் சிக்கினார். அதற்காக 2011 ஆம் ஆண்டு யுனைடெட் கிங்டம் நாட்டில் அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு ஓராண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது.
அதன் பின் நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த முகமது ஆமீர் 2015 ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். ஆனால், முன்பு இருந்த வேகம் மற்றும் திறன் அவரிடம் அதன் பின் இருக்கவில்லை. எனினும் 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் ட்ராபி வெல்ல முகமது ஆமீர் சிறப்பான அளவில் பங்காற்றி இருந்தார்.
அதன் பின்னரும் அவருக்கு பாகிஸ்தான் அணியில் நிரந்தர வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது ஃபார்மும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு தனது 28 வது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்து இருந்தார். அதன் பின் உலகெங்கிலும் நடந்த டி20 தொடர்களில் ஆடி வந்தார்.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அவர் ஓய்வில் இருந்து மீண்டு வந்து, பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றார் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விளையாடினார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்விகளை சந்தித்து குரூப் சுற்றுடன் வெளியேறியது.
இந்த நிலையில், முகமது ஆமீருக்கு பாகிஸ்தான் அணியில் முக்கியத்துவம் இல்லாமல் போனது. இதை அடுத்து இளம் வீரர்களுக்கு வழிவிட்டு தான் விலகுவதாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் முகமது ஆமீர்.