அபுதாபி : அபுதாபியில் நடைபெற்று வரும் டீட்டை கிரிக்கெட் தொடரில் நியூயார்க் அணி சார்பாக விளையாடிய முஹம்மது அமீர் ஒரே ஓவரில் ஒரு ரன் அவுட் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருப்பது கிரிக்கெட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானில் மிகவும் பிரபலமாக உருவெடுத்த வேகப்பந்துவீச்சாளரான முகமது அமீர் ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கி ஐந்து ஆண்டுகள் தடை பெற்றார். அதன் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு வந்த முகமது அமீருக்கு போதிய ஆதரவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து கிடைக்கவில்லை.

இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். தற்போது 31 வயதான முகமது அமீர் அபுதாபியில் நடைபெற்று வரும் 10 ஓவர் கிரிக்கெட் தொடரில் நியூயார்க் அணிக்காக விளையாடினார். இன்றைய ஆட்டத்தில் சென்னை பிரேவ்ஸ் அணிக்கு எதிராக முகமது அமீர் பந்து வீசினார். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அமீர் புயலில் சிக்கி சின்னா பின்னமானது.
முதல் பந்தில் முகமது அமீர் ரன் அவுட் ஆக இரண்டாவது பந்தில் முன்சே என்ற வீரரை தன்னுடைய அபார பந்துவீச்சால் ஆட்டம் இழக்க வைத்தார். இதை அடுத்து அந்த ஓவரின் நான்காவது பந்தை இலங்கை வீரர் ராஜபக்சா டக் அவுட் ஆகி அமிர் பந்தில் வெளியேறினார். இதை அடுத்து ஐந்தாவது பந்து டாட் பாலாக ஆறாவது பந்தில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அசலங்காவையும் டக் அவுட் ஆக அமீர் ஆக்கினார்.
இதன் மூலம் ஒரே ஓவரில் ரன்கள் ஏதும் எடுக்கப்படாமல் ஒரு ரன் அவுட் உட்பட நான்கு விக்கெட்டுகளை அமீர் வீழ்த்தினார். இதன் மூலம் சென்னை அணி ஆறு ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிக்கந்தர் ராசா, முகமது நபி, ஜேசன் ராய் ஆகியோர் பொறுப்பாக விளையாடி சென்னை அணி 10 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்தது.
இதில் முகமது அமீர் இரண்டு ஓவர்கள் வீசி 7 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து களமிறங்கிய நியூயார்க் ஸ்ட்ரைக்கர் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது அமீரின் இந்த பந்துவீச்சு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.