மும்பை: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடர் குறித்து விமர்சனம் செய்து வந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆகியோருக்கு இடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தன்னை விமர்சித்த முகமது கைஃப்பிற்கு அமீர் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். கங்குலி இல்லையென்றால் உங்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பே கிடைத்து இருக்காது என கைஃப் குறித்து அமீர் பேசி இருக்கிறார்.
சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் முகமது அமீர் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்து வந்தார். குறிப்பாக இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்றும், அவர் சும்மா பேட்டை சுற்றக்கூடியவர் என்றும் விமர்சித்திருந்தார். மேலும், இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் அரையிறுதிக்குக் கூடத் தகுதி பெறாது என்றும் அவர் ஆரூடம் கூறியிருந்தார்.
ஆனால், அமீரின் கணிப்பைப் பொய்யாக்கும் வகையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிய முகமது கைஃப், "அமீர் இந்தியாவைப் பற்றிப் பேசுவதெல்லாம் சும்மா விளம்பரம் தேடுவதற்காகத் தான். அவர் கூறுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை" என்று சாடியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தற்போது அமீர் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

கைஃப்பின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அமீர், இருவரின் கிரிக்கெட் அனுபவத்தையும் ஒப்பிட்டுப் பேசினார். "முகமது கைஃப் எவ்வளவு கிரிக்கெட் விளையாடியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அதனால் அவருடைய புள்ளிவிவரங்களை நான் பார்த்தேன். அவர் வெறும் 29 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் அவரது ஸ்டிரைக் ரேட் வெறும் 103 தான். ஆனால் நான் 350க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். என் புள்ளிவிவரங்களை நீங்கள் எடுத்துப் பாருங்கள். இந்தியாவைப் பற்றிப் பேசிப் பிரபலம் ஆக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்று அமீர் ஆவேசமாகக் கூறினார்.

மேலும் பேசிய அவர், கைஃப்பின் கிரிக்கெட் வாழ்க்கையையே விமர்சித்தார். "நான் என்னுடைய பந்துவீச்சுத் திறமையால் அணியில் இடம்பிடித்து விளையாடினேன். ஆனால் நீங்கள் வெறும் ஃபீல்டிங் செய்வதற்காக மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு நீங்கள் உங்கள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு (தாதா) தான் நன்றி சொல்ல வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு இது போன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பது உங்களுக்கு அழகல்ல" என்று முகமது அமீர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி கோப்பையைத் தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் சூழலில், முன்னாள் வீரர்களின் இந்த மோதல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.