
நம்பகமான வீரர்
முகமது அசாருதீன் 90களில் இந்திய அணியின் நம்பகமான வீரராக திகழ்ந்தார். கபில் தேவுக்கு பின் நீண்ட காலம் இந்திய அணியின் கேப்டனாக பதவி வகித்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.

அசாருதீன் மீது குற்றச்சாட்டு
சிறந்த பீல்டர், சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கினார் முகமது அசாருதீன். 90களின் முடிவில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. அப்போது 2000மாவது ஆண்டில் மேட்ச் பிக்ஸிங் விவகாரம் வெடித்தது. அதில் அசாருதீன் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

வாழ்நாள் தடை
அதன் முடிவில் முகமது அசாருதீனுக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அசாருதீன் மீதான குற்றச்சாட்டில் பல்வேறு சர்ச்சைகளுக்கு விடை கிடைக்காத நிலையில், அவர் நீதிமன்றத்தை நாடினார். 2012இல் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது.

தலைவர் ஆனார்
ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் முகமது அசாருதீன் மீதான வாழ்நாள் தடையை சட்டத்துக்கு புறம்பானது என தீர்ப்பு அளித்தது. அதன் பின் கிரிக்கெட் விவாதங்களில் கலந்து கொண்ட அசாருதீன், கடந்த ஆண்டு ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஏன் தடை செய்தார்கள்?
இந்த நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தன்னை ஏன் தடை செய்தார்கள் என்றே தனக்கு உண்மையில் தெரியாது என கூறி இருக்கிறார் முகமது அசாருதீன். எனினும், யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை என்றும் கூறினார்.

உண்மையிலேயே தெரியாது
இது பற்றி அசாருதீன் கூறுகையில், "நடந்த சம்பவங்கள் குறித்து நான் யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை. என்னை தடை செய்ததற்கான காரணங்கள் குறித்து எனக்கு உண்மையிலேயே தெரியாது" என்று கூறினார். தடையில் இருந்து மீண்டது குறித்தும் பேசினார்.

திருப்தி அடைந்தேன்
"நான் போராட முடிவு செய்தேன். 12 ஆண்டுகள் கழித்து இதில் இருந்து நான் விடுபட்டது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் நான் மிகவும் திருப்தி அடைந்தேன். பிசிசிஐ ஏஜிஎம் கூட்டத்தில் கூட கலந்து கொண்டேன்." என்றார் அசாருதீன்.

100வது போட்டி
முகமது அசாருதீன் சரியாக 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். 99வது டெஸ்ட் போட்டி தான் அவரின் கடைசி போட்டியாக இருக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை. தன்னால் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியவில்லை என்பது குறித்து தான் கவலை அடையவில்லை என்றும் கூறினார் அவர்.

திருப்தி
"நான் 16 முதல் 17 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி உள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். இதை விட அதிகமாக நான் என்ன கேட்க முடியும்" என தன் கிரிக்கெட் பயணம் தனக்கு திருப்தி அளித்ததாக குறிப்பிட்டார் அசாருதீன்.


Click it and Unblock the Notifications