டாக்கா: வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் செய்யப்பட்ட விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் வீரருக்கு ஆதரவாகவும், வங்கதேச கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸின் செயலை கடுமையாக விமர்சித்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் தனது கருத்தை கூறி இருக்கிறார்.
பாகிஸ்தான் இன்னிங்ஸின் 39வது ஓவரில் இந்த சம்பவம் அரங்கேறியது. சல்மான் ஆகா மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் 4வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தனர். அப்போது ரிஸ்வான் அடித்த பந்து நேராக எதிர்முனையில் நின்றிருந்த சல்மான் ஆகாவின் காலில் பட்டது. கிரீஸை விட்டு சற்று வெளியே நின்றிருந்த சல்மான், விளையாட்டு உணர்வுடன் அந்த பந்தை எடுத்து பந்துவீச்சாளரான மெஹிதி ஹசனிடம் திருப்பிக் கொடுக்க குனிந்தார். ஆனால் அதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய மெஹிதி ஹசன், பந்தை எடுத்து உடனடியாக பெயில்ஸ்களை தட்டிவிட்டு ரன் அவுட் கேட்டார். 3வது நடுவரும் விதிமுறைகளின்படி அவருக்கு அவுட் வழங்கினார்.

எந்த ஒரு ரன் எடுக்கும் நோக்கமும் இன்றி பந்தை எடுத்து கொடுக்க முயன்ற பேட்ஸ்மேனை, ஒரு கேப்டனே இப்படி ரன் அவுட் செய்தது சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முகமது கைப், "இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. விக்கெட் எடுக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசரமும் இந்த ரன் அவுட்டை நியாயப்படுத்தாது. அதுவும் ஒரு கேப்டனிடம் இருந்து இப்படி ஒரு செயல் வந்திருப்பது வேதனை அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், "இளம் வீரர்கள் ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் விளையாடுவது உலகக்கோப்பை இறுதிப்போட்டியாகவே இருந்தாலும் சரி, விக்கெட்டுக்காக வங்கதேச கேப்டன் செய்ததை போல் நீங்களும் ஒருபோதும் செய்யாதீர்கள். நேர்மையான விளையாட்டுத் திறன் இல்லாத எந்த ஒரு விளையாட்டும் உண்மையான விளையாட்டு அல்ல" என்று மிகக் கடுமையாக சாடியுள்ளார்.
