"மூட்டையைக் கட்டிக்கொண்டு ஓய்வு பெற வேண்டிய நேரம்".. முக்கிய பவுலர் நிலைமையை பார்த்து கைஃப் ஆவேசம்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்பட்டது குறித்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரை கடுமையாக சாடியுள்ளார். குல்தீப் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதே நல்லது என்று கைஃப் ஆவேசமாக பேசி இருக்கிறார்.
குல்தீப் யாதவ் இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார். டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என மூன்று வடிவ போட்டிகளிலும் விக்கெட்களை குவித்து தன்னை நிரூபித்து இருக்கிறார். ஆனாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. பும்ராவுக்கு நிகராக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய குல்தீப் யாதவ் பத்தோடு பதினொன்று என்கிற ரீதியில் தான் இந்திய அணியில் சில போட்டிகளில் மட்டும் வாய்ப்பு பெற்று ஆடி வருகிறார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கைஃப், "குல்தீப் யாதவ் தனது மூட்டையைக் கட்டிக்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைபெற வேண்டிய நேரம் இது. இன்று பும்ரா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி என யாரும் விளையாடவில்லை. அப்படியிருந்தும் குல்தீப்பிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் பந்துவீச்சு எந்தவித பலமும் இல்லாமல் இருந்தது."
"இடதுகை சுழற்பந்து வீச்சாளர் இங்கு பயனுள்ளதாக இருந்திருப்பார். 118 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 194 விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்தியுள்ளார். ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் தற்போதைய நிர்வாகத்திற்கு தேவையில்லை போல தெரிகிறது" என்று சாடியுள்ளார் கைஃப்.
கைஃப் மட்டுமின்றி, மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்த முடிவை விமர்சித்துள்ளார். "குல்தீப்பை விளையாட வைக்காததற்கு பேட்டிங் ஆழத்தை (batting depth) காரணம் காட்டுவார்கள். ஆனால் இன்று அர்ஷ்தீப் சிங் 8வது வரிசையில் பேட்டிங் செய்ய களம் இறங்கியுள்ளார். பும்ராவும் இல்லாத நிலையில், குல்தீப்பை நினைத்து வருத்தப்பட மட்டுமே முடிகிறது. இது ஒரு பந்துவீச்சாளரின் நம்பிக்கையை கடுமையாக பாதிக்கும்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 387 ரன்கள் குவித்தது. இந்திய பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. அணியின் ஒரே ஸ்பின்னராக களம் இறங்கிய அக்சர் படேல் 10 ஓவர்களில் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இந்திய அணி 360 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பேட்டிங் ஆழத்திற்காக சிறந்த விக்கெட் டேக்கிங் ஸ்பின்னரான குல்தீப்பை தொடர்ந்து பெஞ்சில் அமர வைப்பது ரசிகர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

