ஹைதராபாத் : பாகிஸ்தான் வீரர்கள் முகமது நவாஸ், முகமது வாசிம் செய்த சொதப்பல் பீல்டிங் சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நகைச்சுவையாக மாறி பரவி வருகிறது.
பாகிஸ்தான் வீரர்கள் போல பீல்டிங் சொதப்பல் செய்ய கிரிக்கெட் உலகில் வேறு எந்த அணியுமே இல்லை.
இணையத்தில் தேடினாலே நூறு வீடியோவாவது பாகிஸ்தான் அணியின் பீல்டிங் சொதப்பல் குறித்து நமக்கு கிடைக்கும்.

அது ஒரு சம்பவத்தை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலும் அரங்கேற்றி நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்து மன அழுத்தத்தை போக்க உதவி இருக்கிறார்கள் முகமது வாசிம் மற்றும் முகமது நவாஸ்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய பயிற்சிப் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் பந்துவீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் துவம்சம் செய்து கொண்டிருந்தனர். அப்போது 23 வது ஓவரில் ஹாரிஸ் ரௌப் பந்து வீசினார். மார்னஸ் லாபிஷேன் பந்தை அடித்தார்.
பந்து பவுண்டரியை நோக்கி போனாலும் அதன் அருகே வாசிம் இருந்தார். அவர் பந்தை பிடித்து விடுவார் என நினைத்த நிலையில், முகமது நவாஸ் பந்தை பிடிப்பது போல ஓடி வந்தார். அதைப் பார்த்த வாசிம், "அண்ணனுக்கு வழி விடுவோம்" என ஒதுங்கினார்.
பந்தின் அருகே வந்த உடன் வாசிம் அருகே வருவதை பார்த்த நவாஸ், "தம்பி பந்தை பிடிக்கப் போகிறார் போல" என அந்தப் பக்கம் நழுவ, கடைசியில் பந்து இருவருக்கும் "டாடா பைபை" சொல்லி விட்டு பவுண்டரியை எட்டியது.

ஹாரிஸ் ரௌப் உச்சகட்ட கடுப்பானார். ஆனாலும், எதுவும் சொல்ல முடியாத நிலையில் அதை கடந்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஹாரிஸ் ரௌப் பந்துவீச்சை குறி வைத்து தாக்கினார்கள். அவர் 9 ஓவர்களில் 97 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். குறைந்தபட்சம் இந்த ஒரு பவுண்டரியையாவது நவாஸ் அல்லது வாசிம் தடுத்து இருக்கலாம்.
ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 77 ரன்களும், கேமரான் கிரீன் 50 ரன்களும் குவித்தனர்.