சிட்னி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பரான முகமது ரிஸ்வானுக்கு, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் மறக்க முடியாத அவமானம் நேர்ந்துள்ளது. மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவரை, அணியின் கேப்டன் வில் சதர்லேண்ட் "நீ ஆடியது போதும், உள்ளே வா" என்று வலுக்கட்டாயமாக 'ரிட்டயர்ட் அவுட்' முறையில் வெளியேற்றிய சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டி முகமது ரிஸ்வானுக்கு 300-வது டி20 போட்டியாகும். ஒரு மைல்கல் போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்த்தால், அவர் ஆமை வேகத்தில் ரன் சேர்த்தார். 4-வது வீரராகக் களமிறங்கிய ரிஸ்வான், ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில், 23 பந்துகளைச் சந்தித்து வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அணியின் ஸ்கோர் 180-ஐத் தாண்ட வேண்டிய சூழலில், ரிஸ்வான் இப்படி 'முட்டிக்கொண்டு' இருந்ததைப் பார்த்த கேப்டன் வில் சதர்லேண்ட் கடுப்பானார். 17-வது ஓவர் முடிந்ததும், "தம்பி.. நீங்க ரன் அடிக்கிறது மாதிரி தெரியல.. பெவிலியனுக்குத் திரும்ப வாங்க" என்பது போல அவரை பாதியிலேயே திரும்ப அழைத்தார். ஒரு சர்வதேச அணியின் சீனியர் வீரருக்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியாது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரிஸ்வானை வெளியேற்றிவிட்டு, ஹசன் கானுடன் ஜோடி சேர கேப்டன் வில் சதர்லேண்ட் களமிறங்கினார். ஆனால் விதி யாரை விட்டது? தான் சந்தித்த முதல் பந்திலேயே சதர்லேண்ட் ரன்-அவுட் ஆகி 1 ரன்னில் வெளியேறினார். இறுதியில் மெல்போர்ன் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரிஸ்வான் இருந்திருந்தால் இன்னும் குறைவான ஸ்கோரே வந்திருக்கும் என்பது கேப்டனின் கணிப்பு.
2026 டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ரிஸ்வான் போராடி வருகிறார். ஆனால், பிபிஎல் தொடரில் அவரது ஆட்டம் படுமோசமாக உள்ளது. இந்த தொடரில் ரிஸ்வான் 8 இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 167 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 101.82 மட்டுமே.
ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி மற்றும் இடத்தைப் பறிகொடுக்கும் நிலையில் இருக்கும் ரிஸ்வானுக்கு, ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த "ரிட்டயர்ட் அவுட்" சம்பவம் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. "ரிஸ்வான் பாய்.. உங்களை இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே" என பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.