பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ரிஸ்வான், இமாமிடம் 4 மணி நேரம் தீவிர விசாரணை.. சைபர் பிரிவு அதிரடி
இஸ்லாமாபாத்: இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது பாகிஸ்தான் அணியின் ஓய்வறை ரகசியங்களைத் திருட்டுத்தனமாகக் கசியவிட்டதாக எழுந்த புகாரில், நட்சத்திர வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோரிடம் அந்நாட்டின் தேசிய சைபர் கிரைம் விசாரணை முகமை (NCCIA) சுமார் 4 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே தேசிய அணி வீரர்கள் மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியமே (PCB) சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்து விசாரணை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட படுதோல்விகளைத் தொடர்ந்து, ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் ரிஸ்வான் மற்றும் இமாம் உள்ளிட்ட 7 வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் தொடரின் நடுவிலேயே அதிரடியாகத் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

பாகிஸ்தான் அணியின் ஆட்ட வியூகங்கள் மற்றும் உள்விவகாரங்கள் வெளியே கசிந்ததே இந்த நடவடிக்கைக்குக் காரணம் எனத் தெரிகிறது. லாகூரில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜரான இருவரிடமும் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. முன்னதாக, அணியின் பாதுகாப்பு மேலாளர் இரு வீரர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். செல்போன்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த வீரர்கள் இருவரும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதிகாரிகளின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், இன்று தொடங்கவுள்ள பாகிஸ்தானின் முன்னணி முதல்தர உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ரிஸ்வான் மற்றும் இமாம் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருக்கும் மோசின் நக்வி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். அவரது அமைச்சகத்தின் கீழேயே இந்த சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த விவகாரம் சாதாரண கிரிக்கெட் ஒழுங்கு நடவடிக்கையைத் தாண்டி குற்றவியல் விசாரணை வரை சென்றுள்ளது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிஸ்வான் மற்றும் இமாம் சரியாக ஆடாததால் இதுபோன்ற விசாரணை அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கிறார்களா? என்ற கேள்வியும் ரசிகர்களால் எழுப்பப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

