மும்பை: தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சாளர்களுக்கு ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் முகம்மது சஷாத் இன்று ஷாக் கொடுத்து விட்டார்.
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை தவிடு பொடியாக்கிய அவர் அதிரடியாக ரன் குவித்து அசத்தினார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சஷாத் 19 பந்துகளில் 44 ரன்களைக் குவித்து ரசிகர்களை குதூகலிக்க வைத்து விட்டார்.

28 வயதான இளம் வீரர் சஷாத், வலது கை பேட்ஸ்மேன் ஆவார். 2009ம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் ஆடி வருகிறார். கடந்த 2011 நடந்த ஐசிசி இன்டர்கான்டினென்டல் கோப்பைக்கான போட்டியின்போது கனடாவுக்கு எதிராக 214 ரன்களைக் குவித்து பிரமிக்க வைத்தவர் இவர்.
ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் இரட்டை சதம் போட்டது அதுவே முதல் முறையாகும் என்பதால் வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெற்றார் சஷாத்.
இன்று உலகக் கோப்பை டி 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் பெயரையும், தனது பெயரையும் சேர்த்துப் பொறித்து விட்டார் சஷாத். இன்றைய போட்டியில் 209 என்ற மிகப் பெரியஸ்கோரை சேஸ் செய்கிறோம் என்ற பயமே இல்லாமல் பந்து வீச்சைப் பிரித்து மேய்ந்து விட்டார் சஷாத்
வந்த பந்தையெல்லாம் அடித்து நொறுக்கிய சஷாத்தைத் தடுக்க முடியாமல் திணறி்ப் போய் விட்டது தென் ஆப்பிரிக்கா. ஒரு வழியாக கிறிஸ் மோரிஸ் இவரை போல்ட் ஆக்க தென் ஆப்பிரிக்கா தப்பிப் பிழைத்தது.