லக்னோ: இந்திய அணியின் முகமது ஷமி பவுலிங்கிற்கு எதிரான பென் ஸ்டோக்ஸ் ஆடிய விதம் சிறுபிள்ளைத்தனமாக இருந்ததாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கில் வாஹம் விமர்சித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5 தோல்வி, ஒரு வெற்றி என்று மோசமான நிலையில் உள்ளது. இதற்கு மேல் அரையிறுதி வாய்ப்பை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லரே கூறியுள்ளார். அதேபோல் இங்கிலாந்து பயிற்சியாளர்களில் ஒருவரான ட்ரெஸ்காத்திக், உலகக்கோப்பை தொடருக்கு வந்துவிட்டு, இந்திய டெஸ்ட் தொடரை பற்றி பேச தொடங்கியுள்ளார்.

ஆனால் இங்கிலாந்து அணி 2025ஆம் ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதே சந்தேகம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகளே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற முடியும். ஆனால் இங்கிலாந்து அணியின் ஆட்டத்தை பார்த்தால், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தான் முடிக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள் முன்னாள் வீரர்கள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கில் வாஹன் பேசுகையில், 2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ரிக்கி பாண்டிங்கிற்கு ஃபிளிண்டாஃப் அட்டகாசமான ஸ்பெல் ஒன்றை வீசியிருப்பார். அதனை பலரும் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஸ்பெல் என்று பாராட்டுவார்கள். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் முகமது ஷமியின் ஸ்பெல் அமைந்தது என்றே கூறுவேன். சமகால கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் பென் ஸ்டோக்ஸும் ஒருவரும். முகமது ஷமி பந்துவீச்சில் அவர் சிறுபிள்ளையை போல் விளையாடினார்.

அதேபோல் ஜோ ரூட் ஆட்டமிழந்த விதமே அவரின் ஃபார்மை தெளிவாக காட்டுகிறது. ஜோ ரூட்டின் வீசிய முதல் பந்தை பும்ரா, ஃபுல்லர் லெந்தில் நேராக வீசினார். அப்போது ஜோ ரூட்டின் தலை கீழே பார்த்தவாறு, கொஞ்சம் ஆஃப் திசையில் சாய்ந்திருந்தது. அதிலேயே ஜோ ரூட் நல்ல ஃபார்மில் இல்லை என்று தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அதனை அவர் ரிவ்யூ செய்ய எப்படி முடிவெடுத்தார் என்று தெரியவில்லை. அப்போது எதிர்முனையில் நின்ற ஜானி பேர்ஸ்டோவ் தடுத்திருக்க வேண்டும். இங்கிலாந்து அணி தோல்வியடைவதை விடவும், போராடாமல் தோற்பதே சோகமளிப்பதாக தெரிவித்துள்ளார்.