மும்பை : 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிப் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லாமல் தவித்து வருகிறது.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு தற்போது தான் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து முகமது கையிப்பிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் இந்தியா தனது சொந்த மண்ணில் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதால் நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. ஏனென்றால் மற்ற அணிகளை விட நமக்கு மைதானங்களின் தன்மை பற்றி நன்றாகவே தெரியும். சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். உலக கோப்பையை வெல்லும் திறமையுடன் நம்மிடம் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவாலே அனைத்து சீனியர் வீரர்களும் தயாராக இருக்க வேண்டும். அது உடல் தகுதியாக இருந்தாலும் சரி, பார்மாக இருந்தாலும் சரி. பந்துவீச்சில் நாம் சரியாக தான் இருக்கிறோம் என நினைக்கிறேன். நமது வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்றால் நம்மை வீழ்த்துவது மிகவும் கடினமாக இருக்கும்.விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இந்த தொடரில் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்.
சீனியர் வீரர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் நிச்சயமாக நம்மால் வெற்றி பெற முடியும். இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா மிகப்பெரிய காரணமாக இருப்பார். அவர் சில மாதங்களாக காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் ஆசிய கோப்பைக்கு திரும்புவார் என சொல்கிறார்கள். இது நிச்சயமாக இந்திய அணிக்கு நல்ல செய்தி தான்.
இந்தியாவுக்கு பும்ரா தேவைப்படுகிறார். ரோகித் சர்மா ஒரு கேப்டனாக பும்ராவை மிகவும் மிஸ் செய்து இருப்பார். ரோகித் சர்மா கேப்டனாக இருந்ததிலிருந்து பும்ராவின் சேவை அவருக்கு கிடைக்கவில்லை. பும்ரா, சிராஜ், ஷமி ஆகிய மூன்று வீரர்களும் பிளேயிங் லெவனில் இடம் பெற்றால் நிச்சயமாக இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினமாக இருக்கும். இதேபோன்று சுழற் பந்துவீச்சில் உங்களுக்கு ஜடேஜா, குல்தீப், சாகல் ஆகியோரும் இருக்கிறார்கள் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.