மும்பை: இந்திய அணியில் ஒரு திறமையான வீரர் தொடர்ச்சியாக புறகணிக்கப்பட்டு வருவதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்து வெளியேறியது.

இந்திய அணியின் தோல்விக்கு பல்வேறு காரணங்களை ரசிகர்கள் அடுக்கிக்கொண்டே வருகின்றனர். குறிப்பாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மீது அதிக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் உலகக்கோப்பை அணியில் ஒரு வீரரை மிஸ் செய்தனர் என முகமது கைஃப் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியில் எந்த சூழ்நிலையிலும் விளையாடக்கூடிய ஒரு வீரர் சஞ்சு சாம்சன் தான். ஆனாலும் அவரை இன்னும் டி20 உலக கோப்பைக்கான அணியில் இந்திய நிர்வாகம் தேர்வு செய்ய மறுக்கிறது. இது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், விரைவாக டாப் ஆர்டர் விக்கெட்கள் சரிந்தாலும், அதே வேகத்தில் வந்து அதிரடி காட்டக்கூடிய வீரர் அவர். சன்சு சாம்சனால் சுழற்பந்துவீச்சாளர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் என இருவரையுமே விளாச முடியும் என முகமது கைஃப் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 2015ம் ஆண்டு அறிமுகமான சஞ்சு சாம்சன், இதுவரை 16 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தால் சஞ்சு சாம்சன் நிச்சயம் பெரிய வீரராக உருவெடுப்பார். அடுத்த உலகக்கோப்பையிலாவது அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என கைஃப் கூறியிருக்கிறார்.