மும்பை: 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில், ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் துணை கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், இந்த விவகாரம் குறித்து தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். "அக்சர் படேல் எந்தத் தவறும் செய்யவில்லை, அவரது பதவி நீக்கத்திற்கு உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்" என்று அவர் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவிற்குத் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு, இந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டிருந்தார்.

தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக டி20 அணியில் இடம்பெறாத கில்லுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முகமது கைஃப், "துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அக்சர் படேலுக்கு தேர்வுக்குழு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன். பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்து அவர் இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டிருக்கக் கூடாது. அக்சர் எந்தத் தவறும் செய்யவில்லை, எனவே அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்," என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
சமீப ஆண்டுகளாக இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக அக்சர் படேல் வலம் வருகிறார். குறிப்பாக, 2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒரு வீரரை, முன்னறிவிப்பின்றி துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளது தேர்வுக்குழுவின் வெளிப்படைத்தன்மை மீது கேள்விகளை எழுப்பியுள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் அக்சர் படேல் செயல்பட்டிருந்தார். மேலும், டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். இத்தகைய சிறப்பான செயல்பாடுகளுக்குப் பிறகும், அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.