மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்தபோது போட்டிக்கு இடையில் எனர்ஜி பானம் அருந்தியது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு முதல் முறையாகப் பதிலடி கொடுத்துள்ளார். நாட்டிற்காக விளையாடும்போதும், கடினமான சூழல்களிலும் நோன்பைத் தற்காலிகமாக விடுவதற்கு இஸ்லாமிய சட்டத்திலேயே விதிவிலக்குகள் இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக தனது சிறப்பான பந்துவீச்சால் பல வெற்றிகளைத் தேடித் தந்தாலும், முகமது ஷமி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தேவையற்ற விமர்சனங்களுக்கும், வெறுப்புப் பேச்சுகளுக்கும் ஆளாகி வருகிறார். அந்த வகையில், ரம்ஜான் மாதத்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஒன்றின் போது அவர் எனர்ஜி பானம் குடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து அளித்த பேட்டியில் மனம் திறந்துள்ள முகமது ஷமி, "நாங்கள் 42 முதல் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நாட்டுக்காக விளையாடுகிறோம். எங்களை நாங்களே தியாகம் செய்கிறோம். இது போன்ற சமயங்களில் நோன்பு இருப்பதற்கு எங்கள் சட்டத்திலேயே சில விதிவிலக்குகள் உள்ளன. நீங்கள் நாட்டிற்காக ஒரு பணியைச் செய்யும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது இந்த விதிவிலக்குகள் பொருந்தும். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் சிலரை முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அந்த நபர் என்ன செய்கிறார், யாருக்காகச் செய்கிறார் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் மதச் சட்டமே சில விதிவிலக்குகளை அனுமதிக்கிறது. அதற்குப் பதிலாக நாங்கள் அபராதம் செலுத்தலாம் அல்லது பின்னர் அந்த நோன்பை ஈடு செய்யலாம். நான் அதைச் செய்தேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக வரும் வெறுப்புப் பதிவுகள் குறித்துக் கேட்டபோது, "சிலர் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளவே இது போன்ற விஷயங்களைக் கையில் எடுக்கிறார்கள். நான் இப்போது சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளைப் படிப்பதில்லை. எனது கணக்குகளை எல்லாம் எனது குழுதான் நிர்வகிக்கிறது. அதனால், ட்ரோல்கள் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை" என்று முகமது ஷமி பதிலளித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி வரும் முகமது ஷமி, தன் மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு இந்த பேட்டியின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் அடுத்து துலீப் டிராபி தொடரில் விளையாட இருக்கிறார்.