மும்பை: ஃபிட்னஸ் பிரச்சனை இருந்திருந்தால் சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல், துலீப் டிராபி, ரஞ்சி டிராபி தொடர்களில் தொடர்ச்சியாக விளையாடி இருக்க முடியாது என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார். ஃபிட்னஸ் பிரச்சனை காரணமாக ஷமி தேர்வு செய்யப்படவில்லை என்று அஜித் அகர்கர் கூறி இருந்த சூழலில், முகமது ஷமி முழு ஃபிட்னஸ் உடன் இருப்பதாக தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை உருவாக்கி இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் ஆட்டத்தை காண்பதற்கு ரசிகர்கள் அதிக ஆர்வத்தோடு இருக்கின்றனர். இதனிடையே இந்திய அணியில் ஹர்சித் ராணாவின் தேர்வு ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.

அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது ஷமிக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முகமது ஷமி குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போதும், அஜித் அகர்கர் தெளிவாக எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதனால் இந்திய அணியில் இருந்து முகமது ஷமி ஓரம்கட்டப்பட்டதாக தெரிய வந்தது.
இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக முகமது ஷமி விளையாட தொடங்கி இருக்கிறார். உத்தராகண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 14.5 ஓவர்களை வீசிய அவர், 37 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 மெய்டன் உட்பட 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அதிலும் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
டெய்லண்டர்களின் விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்தினாலும், கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்துள்ளார். அதேபோல் முகமது ஷமியின் ஃபிட்னஸ் நன்றாக முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனாலும் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதுதொடர்பாக முகமது ஷமி பேசுகையில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன்.
அதன்பின்னரே சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் தொடர், துலீப் டிராபி மற்றும் ரஞ்சி டிராபி தொடர்களில் விளையாடி வருகிறேன். நல்ல ஃபார்மிலும் உள்ளேன். என்னுடைய ஃபிட்னஸ் குறித்து யாரும் விசாரிக்கவில்லை. கிரிக்கெட் வீரரின் ஃபிட்னஸ் குறித்து தெரிந்து கொள்வது தேர்வுக் குழுவின் பணி. அது என்னுடைய வேலை அல்ல. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன்.
ஆனாலும் இந்திய அணிக்காக விளையாட ஏன் ஃபிட்னஸ் இல்லை என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. ஃபிட்னஸ் பிரச்சனை இருந்திருந்தால், பெங்கால் அணிக்காக விளையாடி இருக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக பேசி எந்த சர்ச்சையையும் உருவாக்க விரும்பவில்லை. 4 நாட்கள் நடக்கும் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாட முடியும் என்றால், ஒருநாள் கிரிக்கெட்டிலும் என்னால் விளையாட முடியும்.
ஒருவேளை காயம் அடைந்திருந்தால் என்சிஏவில் தகவல் கொடுத்திருப்பேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்றால், முழு ஃபிட்னஸ் உடன் இருக்கிறேன் என்றுதானே அர்த்தம் என தெரிவித்துள்ளார். முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் எழுச்சி காரணமாக முகமது ஷமி ஓரம்கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.