மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி கடும் உணவு கட்டுப்பாடு பழக்கத்தில் இருந்து தனது உடல் தகுதியை மீட்டு இருப்பதாக பெங்கால் அணியின் பயிற்சியாளராக சங்கர் பால் தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் கடைசியாக ஷமி விளையாடி இருந்தார். அதன் பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டதால் கடந்த ஒன்றை ஆண்டுகளாக எந்தவித சர்வதேச போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக ஷமி உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெங்கால் அணியின் பயிற்சியாளர் சங்கர் பால், வேகப்பந்துவீச்சாளர்கள் காயத்திலிருந்து மீண்டு வர நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஷமி சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு போட்டி முடிவடைந்த பிறகும் ஷமி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார்.
ஒரு விளையாட்டு வீரராக ஷமி கடும் அர்ப்பணிப்பை அளிக்கக் கூடிய பவுலராக இருக்கிறார். இதுபோல் ஷமி காலை 6:00 மணிக்கு மைதானத்திற்கு வந்துவிடுவார். மற்ற வீரர்கள் மைதானத்திற்கு வருவதற்கு முன்பே ஷமி வந்து பயிற்சி செய்வார். ஷமி தீவிரமான உணவு கட்டுப்பாட்டு விஷயத்தில் இருப்பார்.
ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உணவு எடுத்துக் கொள்கிறார். ஷமிக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணியை ஷமி எடுத்துக்கொண்டு நான் பார்த்ததே இல்லை என்று சங்கர் பால் கூறியுள்ளார். இந்த நிலையில் ஷமி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடப் போகிறார்.பும்ரா ஓய்வில் இருக்கும் நிலையில் ஷமி அணியின் முக்கிய பவுலராக இருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஷமி திரும்புவதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. புதிய அணி பயிற்சியாளர் குழு உடன் ஷமி தற்போது தான் முதன்முறையாக விளையாடுகிறார். ஷமி மைதானத்திற்கு வந்த உடனே பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் அவரைக் கட்டி அணைத்து வரவேற்றார். அதன் பிறகு, ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பந்துவீச்சு பயிற்சியில் ஷமி ஈடுபட்டார்.