அம்ரோ: உபியில் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோவில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் குடும்பம் வசித்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன், அந்த பகுதியில் மாட்டிறைச்சி வெட்டப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக திடோலி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் சகோதரர் முகமது ஹாசீப், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரதீப் பரத்வாஜை தாக்கியதாகவும் கூற்ப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் முகமது ஹாசீப்பை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
இதற்கிடையே மாட்டிறைச்சி வெட்டப்பட்ட விவகாரத்தில் தனது மகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதை முகமது ஷமியின் தந்தை தவுசீப் அகமது மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "எனது மகன் சம்பவ இடத்திற்கு வேடிக்கை பார்க்க மட்டுமே சென்றான். அதுவும் மிகவும் தாமதமாகவே சென்றான். முகமது ஷமி, இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கிய பின்னர்தான் இது போன்ற நெருக்கடிகளை எங்கள் குடும்பத்துக்கு ஏற்படுகின்றனர்.
இது குறித்து அம்ரோ மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நான் புகார் அளித்திருந்தேன். அதற்கு பழிவாங்கவே எனது மகன் கைது செய்யப்பட்டுள்ளான். மாட்டிறைச்சி விவகாரத்தில் எங்கள் குடும்பத்தினரை சிக்க வைத்து அவப் பெயரை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்'' என கூறியுள்ளார்.