மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்த சூழலில் இந்தியாவின் பேட்டிங் தடுமாறி வரும் நிலையில் பந்துவீச்சில் பும்ராவை தவிர வேறு எந்த ஒரு இந்திய வீரரின் பவுலிங்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில் இந்தியாவின் அனுபவ வீரரான முகமது சமி எப்போது ஆஸ்திரேலியாவிற்கு திரும்புவார் என ஒட்டு மொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். காரணம் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கும் சமி கடந்த 2023 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார்.

கடந்த ஒரு ஆண்டுகளாக உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் சமி ஈடுபட்ட நிலையில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் சமி தன்னுடைய நூறு சதவீத உடல் நலத்தை எட்டினார். ரஞ்சி கோப்பையில் விளையாடிய சமி அபாரமாக செயல்பட்டாலும், அதன் பிறகு சையது முஸ்தாக் அலி தொடரில் விளையாடினார்.
இவ்வளவு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் சமி ஏன் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படவில்லை என பலரும் கேள்வி கேட்டு வந்தனர். இந்த நிலையில் சமி ஆஸ்திரேலியா தொடருக்கு பரிந்துரை செய்யப்பட மாட்டார் என பிசிசிஐ மருத்துவ குழு தற்போது விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ மருத்துவ குழு, சமி தமது காயத்தில் இருந்து மீண்டு கடந்த நவம்பர் மாதம் ரஞ்சிப் போட்டியில் விளையாடினார்.
அதில் மொத்தம் அவர் 43 ஓவர் வீசினார். இதனை தொடர்ந்து சையது முஸ்தாக் அலி தொடரில் 9 போட்டிகளில் பந்து வீசினார். இந்த போட்டிகளுக்கு நடுவே சமி மட்டும் வலைப்பயிற்சியில் பந்து வீசினார். இதன் மூலம் அவருடைய உடல் தகுதி எப்படி இருக்கிறது என்று நாங்கள் சோதித்து வந்தோம்.
அப்போதுதான் சமியின் முட்டி பகுதியில் லேசான வீக்கம் இருந்தது. ஏனென்றால் அவர் கடந்த ஒரு ஆண்டாக எந்த கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது அவருடைய பந்துவீச்சு சுமை அதிகரித்ததும், அவருடைய கால் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக தான் அவருக்கு முட்டி பகுதியில் வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் 100% உடல் தகுதியை எட்டவில்லை.
இதன் காரணமாக பார்டர் கவாஸ்கர் தொடரில் எஞ்சி இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டியில் சமி விளையாட மாட்டார். தற்போது ஷமி தன்னுடைய காலில் வலுவை அதிகரிப்பதற்கான பயிற்சியில் ஈடுபடுவார். மீண்டும் பெங்களூருவில் அவருக்கு பந்துவீச்சு பயிற்சி அளிக்கப்படும். இதில் அவர் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறார் என்பதை கண்காணித்து மீண்டும் அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி அளிக்கப்படும் தெரிவித்துள்ளது.