கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான், அவர் மீது பல்வேறு புதிய குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். சமீபத்தில் முகமது ஷமி தங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என ஹாசின் ஜஹான் தொடுத்திருந்த வழக்கில் முடிவு வழங்கப்பட்டது. அதில், முகமது ஷமி மாதம் தோறும் ஹாசின் ஜஹான் மற்றும் அவரது மகளுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முகமது ஷமிக்குச் சொல்லும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கும் ஹாசின் ஜஹான், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"எனது கடைசி மூச்சு இருக்கும் வரை நாம் பலமான உறவில் இருக்க வேண்டும் இறைவனே! ஆனால் அது என்ன மாதிரியான உறவு என்பதை உங்களிடமே முடிவுக்கு விட்டுவிடுகிறேன். ஏழு வருடமாக நாம் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டு இருக்கிறோம். அதில் உங்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிட்டது? எந்த குணாதிசயமும் இல்லாமல் பேராசையுடனும், பழிவாங்கும் எண்ணத்துடனும் உங்கள் குடும்பத்தையே நீங்கள் நாசம் செய்தீர்கள்."
"எத்தனை குற்றவாளிகளுக்கு லஞ்சம் கொடுத்து என்னை காயப்படுத்தவும், எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும், என்னை அவமானப்படுத்தவும், வீழ்த்தவும் முயற்சி செய்தீர்கள்? அதில் உங்களுக்கு ஏதாவது கிடைத்ததா? சமூக விரோதிகளிடமும், விலை மாதர்களிடமும் செலவு செய்த பணத்தை உங்கள் மகளின் படிப்பு, வாழ்க்கை மற்றும் எதிர்காலத்திற்குச் செலவு செய்திருந்தால், எனக்கு நல்ல வாழ்க்கை அளிக்கச் செலவு செய்திருந்தால், இது எத்தனை நன்றாக இருந்திருக்கும்? நீங்கள் உங்கள் பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டு இருப்பீர்கள். நல்ல மரியாதையான, கண்ணியமான வாழ்க்கையை வாழ்ந்திருப்பீர்கள்."
"ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் சமூகத்தை சாதகமாக எடுத்துக் கொண்டு, சமூகத்திற்கு எதிரான மக்களுடன் இணைந்து என்னை தவறாக சித்தரித்தீர்கள். நான் இப்போது சட்டத்தின் உதவியுடன் எனது உரிமைகளை பெற்று இருக்கிறேன். இனி மகிழ்ச்சியுடன் வாழ்வேன். இப்போது நீங்கள் யோசிங்கள், உங்களுக்கு எந்த ஆதரவு பலமானது? சமூகமா அல்லது சட்டமா? உங்களுக்கு ஆதரவு அளித்து வரும் சமூக விரோதிகள் உங்களது பாவத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களது மோசமான நேரம் ஆரம்பித்துவிட்டது. இதே மக்கள் உங்கள் வாழ்க்கையை நரகத்திற்கு இழுத்துச் செல்வார்கள்!" என்று ஆவேசமாகக் கூறியுள்ளார் ஹாசின் ஜஹான்.
ஹாஸின் ஜஹானின் இந்த பேச்சில் இருக்கும் தகவல்கள் உண்மையா? என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது. இதற்கு முன் அவர் ஷமி மீது சுமத்திய பல்வேறு குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இந்த குற்றச்சாட்டுக்கள் எந்த அளவு உண்மை? என்ற கேள்வி எழுகிறது.