"மற்றதை கடவுள் பார்த்துக் கொள்வார்.." இந்திய அணி கம்பேக் குறித்து முகமது ஷமி உருக்கம்
மும்பை: இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலையில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தொடர்ந்து கடினமாக உழைப்பதே தனது வேலை என்றும், மற்றவற்றை கடவுள் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற துலீப் டிராபி இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது ஷமியின் 100-வது முதல்தரப் போட்டியாகும். இதில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கு மண்டலம் கோப்பையைக் கைப்பற்ற முகமது ஷமி உதவினார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு தனது கம்பேக் குறித்துப் பேசிய முகமது ஷமி, "கடினமாக உழைப்பது மட்டுமே எனது வேலை, அதை நான் சிறப்பாகச் செய்து வருகிறேன். மற்ற அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார். முதலாவது போட்டியாக இருந்தாலும் சரி, 100-வது போட்டியாக இருந்தாலும் சரி, எனது உழைப்பும் அணுகுமுறையும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும். நாமே நம்மை உற்சாகப்படுத்திக் கொள்ளாவிட்டால் இந்த உயர்மட்ட கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது" என்று கூறினார்.
கடந்த 2025 மார்ச் மாதத்திற்குப் பிறகு ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு இல்லாத நிலையில், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து விக்கெட்டுகளைக் குவித்து வருகிறார். கடந்த 2025-26 உள்நாட்டு சீசனில் ரஞ்சி கோப்பையில் 36 விக்கெட்டுகளையும், சையத் முஷ்டாக் அலி தொடரில் 16 விக்கெட்டுகளையும், விஜய் ஹசாரே தொடரில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தனது அபார உடற்தகுதி மற்றும் ஃபார்மை அவர் நிரூபித்துள்ளார்.
அடுத்து வரும் நவம்பர் 4 முதல் 15 வரை நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மூலம் ஷமி மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. 2027 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, ஷமியின் அனுபவத்தைப் பயன்படுத்த தேர்வுக்குழு முன்வர வேண்டும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications


