"வைபவ் சூர்யவன்ஷி வயசும், என் கிரிக்கெட் கேரியர் வயசும் ஒன்று..".. முகமது ஷமி நெகிழ்ச்சி
சென்னை: 2026 துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் தென் மண்டலத்தை வீழ்த்தி கிழக்கு மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியைக் கொண்டாடிய மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது அணியில் விளையாடிய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து நெகிழ்ச்சியாகவும் சுவாரசியமாகவும் பேசியுள்ளார்.
இந்த இறுதிப் போட்டி முகமது ஷமிக்கு 100-வது முதல்தரப் போட்டியாகும். அவர் கடந்த 2010 நவம்பர் 17 அன்று தனது முதல் முதல்தரப் போட்டியில் பெங்கால் அணிக்காக அறிமுகமானார். இதில் ஆச்சரியப்படும் விதமாக, வைபவ் சூர்யவன்ஷி அதற்கு 4 மாதங்கள் கழித்து, அதாவது 2011 மார்ச் 27 அன்றுதான் பிறந்துள்ளார். தற்போது 15 வயதிலேயே கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக இருந்து அவர் கோப்பையை வென்றுள்ளார்.

இது குறித்துப் பேசிய 36 வயதான மூத்த வீரர் முகமது ஷமி, "கிழக்கு மண்டல அணியில் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எங்கள் அணியில் விளையாடிய அந்த சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியின் வயதும், எனது முதல்தர கிரிக்கெட் கேரியரின் வயதும் ஒன்றுதான். அவனிடம் குழந்தைத்தனமான சுட்டித்தனமும், விஷயங்களை வேகமாகப் புரிந்து கொள்ளும் திறமையும் உள்ளது" என்றார்.
மேலும், "தற்போதைய காலகட்டத்தில் ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் விளையாடுவதால் இளம் வீரர்கள் மிக விரைவாக முதிர்ச்சியடைந்து விடுகிறார்கள். அவர்களுக்கு அதிகப்படியான பயிற்சிகள் தேவையில்லை. ஆட்டம் நெருக்கடியாக மாறும் தருணங்களில் மட்டும் ஆலோசனைகளை வழங்கி, அவர்களைத் தொடர்ந்து போராட வைக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ஷமி, 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது 100-வது போட்டியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கு மண்டல அணி கோப்பையை வென்றது தனக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகக் கூறிய ஷமி, கடுமையான வெயிலிலும் அனைத்து வீரர்களும் அர்ப்பணிப்புடன் விளையாடியதைப் பாராட்டினார்.


Click it and Unblock the Notifications

