மும்பை: இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒரே நேரத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாக முகமது ஷமி தெரிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் புகழுக்கு இணையான இந்திய பந்துவீச்சாளர் இருக்கிறார் என்றால் அதில் முகமது ஷமியும் ஒருவர்.
நீண்ட நாட்களாக இந்திய அணிக்காக ஆடி வரும் முகமது ஷமி இன்று உலக அளவில் முக்கியமான வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார். இந்த நிலையில் சக வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்தது குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசி இருந்தார். "சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது."

"அவர்கள் இருவரும் இந்தியாவின் ஜாம்பவான்கள். இந்திய நாட்டுக்காக கடந்த 15 - 16 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ராஜாக்கள் என்ற பெயரை பெற்று இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஆனால், இதுதான் இயற்கை. ஒரு வீரர் வெளியே செல்வார். மற்றொரு வீரர் உள்ளே வருவார். எனினும், இது போன்ற நட்சத்திர வீரர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை ஈடு கட்டுவது என்பது மிகவும் சவாலான ஒன்று."
"நீங்கள் நினைத்ததை அடைந்த பிறகு அந்த பயணத்திலிருந்து விடை பெறுவது என்பது உணர்ச்சி பெருக்கான ஒரு விஷயமாக இருக்கும். இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததற்காக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தியாவுக்காக அற்புதமான இன்னிங்ஸ்களை ஆடினார்கள். போகிற போக்கில் பல்வேறு சாதனைகளை உடைத்தார்கள்."
"உலகக் கோப்பை வென்றதற்கு ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்கள், அதன் உதவியாளர்கள் மற்றும் தன்னம்பிக்கைஅளித்த ரசிகர்கள் ஆகியோர்தான் காரணம். நான் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை. உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அந்த வாய்ப்பை 10 சதவீத வீரர்கள் மட்டுமே அவர்கள் வாழ்நாளில் பெறுவார்கள்." என்று முகமது ஷமி கூறினார்.