மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார்.
முக்கியமாக நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு முகமது ஷமி எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் ஷமிக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு லண்டனில் வலி நிவாரண ஊசி போடப்பட்டது. ஆனால் அதற்கும் அவருடைய வலி குறையவில்லை. இதனால் ஷமிக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷமி பங்கேற்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஷமி திகழ்ந்தார். குஜராத் அணிக்காக ஐபிஎல் தொடரில் 2022 ஆம் ஆண்டு ஷமி மிகப் பிரமாதமாக செயல்பட்டார். 2022 ஆம் ஆண்டு 20 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி, கடந்த ஐபிஎல் சீசனில் 28 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
ஏற்கனவே ஹர்தித் பாண்டியா இல்லாத நிலையில் தற்போது ஷமியும் விலகி இருப்பது குஜராத் அணிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மாற்று வீரரை தேடும் பணியில் குஜராத் அணி நிர்வாகம் ஈடுபட்டு இருக்கிறது. இப்படி ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையே பாதிக்கும் செயலாக இருக்கும்.
ஒருவேளை அதிலிருந்தும் மீண்டு வந்தால் இனி அவரால் அக்டோபர் நவம்பர் மாதம் தான் இந்திய அணிக்காக விளையாட முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஷமிக்கு பதில் யாரை களம் இறக்கலாம் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி யோசித்து வருகிறது. இதேபோன்று இந்திய t20 உலக கோப்பையிலும் ஷமிக்கு பதில் மாற்றுவீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு ஏற்பட்டிருக்கிறது.