ஜோகன்னஸ்பர்க்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்த முகமது ஷமியின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதா? அப்படித்தான் தெரிகிறது எனக் கூறி இருக்கிறார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், "இந்திய அணி, ஷமியை மறந்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது போலத் தெரிகிறது" என்று அவர் கூறியிருப்பது, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
35 வயதான முகமது ஷமி, கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில்தான் இந்தியாவிற்காக விளையாடினார். அந்தத் தொடரில், வருண் சக்கரவர்த்தியுடன் இணைந்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
ஆனால், 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, கணுக்கால் மற்றும் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட தொடர் காயங்கள், அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பெரும் தடையாக அமைந்துள்ளன. காயங்களுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், ஜூன் 2023-ல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை.
சமீபத்தில் ரஞ்சி டிராபியில் விளையாடினாலும், தேசிய தேர்வாளர்கள் அவரை மீண்டும் சர்வதேசப் போட்டிக்கு அவசரமாக அழைக்கத் தயங்குவது தெளிவாகத் தெரிகிறது. அவரது நீண்டகால உடற்தகுதியையும், எதிர்காலத் திட்டங்களையும் கருத்தில் கொண்டு, தேர்வாளர்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதாகத் தெரிகிறது. ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் உலகிலேயே முன்னணி வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார் முகமது ஷமி. ஆனால், சமீப காலமாக அவர் காயத்தில் சிக்கி வருவதுதான் சிக்கலாக உள்ளது.
ஷமியின் தொடர் புறக்கணிப்பு குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஏபி டி வில்லியர்ஸ், இந்திய அணி நிர்வாகத்தின் மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். "இது இந்திய அணியின் ஒரு மிகப்பெரிய முடிவு. ஒருவிதத்தில், அவர்கள் ஷமியை மறந்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது போலத் தெரிகிறது."
"திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது; ஒருவேளை, அவருக்கு இன்னும் சில சிறு சிறு காயங்கள் இருக்கலாம். அல்லது, முன்பு இருந்த அந்த வேகம் அவரிடம் இப்போது இல்லாமல் இருக்கலாம். இவை அனைத்தும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இதுவே அவரது பயணத்தின் முடிவல்ல" என்று டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
ஷமியின் புறக்கணிப்புக்கான முக்கியக் காரணமாக, அவரது பந்துவீச்சு வேகத்தில் ஏற்பட்டுள்ள சரிவை டி வில்லியர்ஸ் சுட்டிக்காட்டுகிறார். "அவரால் மீண்டும் அந்த கூடுதல் வேகத்தைக் கண்டறிய முடிந்தால்... சமீபத்தில் அவரது வேகத்தில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டதை நான் கவனித்தேன். ஒருவேளை, அதுதான் அவர் மீண்டும் தேசிய அணியில் இடம்பெறாததற்குக் காரணமாக இருக்கலாம்" என்று அவர் தனது கூர்மையான பார்வையைப் பதிவு செய்துள்ளார்.

விமர்சனங்களை முன்வைத்தாலும், ஷமியின் திறமை மீது தனக்குள்ள மரியாதையையும் டி வில்லியர்ஸ் வெளிப்படுத்தத் தவறவில்லை. "ஷமி ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருப்பார். அவர் ஃபிட்டாகவும், ஃபார்மிலும் இருந்தால், அணிக்கு ஒரு மிகப்பெரிய சொத்து. அவர் அணியில் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏனென்றால், அவர் இந்திய அணிக்காகப் பலமுறை ரசிக்கத்தக்க ஆட்டங்களை ஆடி உள்ளார்" என்று டி வில்லியர்ஸ் புகழாரம் சூட்டினார்.
35 வயதான முகமது ஷமி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறார். இந்திய அணி, இளம் வீரர்களை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ள நிலையில், ஷமி மீண்டும் தனது பழைய வேகத்தையும், உடற்தகுதியையும் நிரூபித்தால் மட்டுமே, அவரது சர்வதேச கிரிக்கெட் பயணம் தொடரும் என்பதே டி வில்லியர்ஸின் கருத்தாக உள்ளது.