மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரரான முகமது சமி, குஜராத் அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 38 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் குஜராத் அணியை 141 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணி வீழ்த்தியது.
இந்த போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகமது சமி, எனக்கு இதை கம்பேக் மேட்ச் என்று ஏன் சொல்கிறீர்கள். உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. கடந்த ஆண்டு இதை என்னிடம் சொல்கிறீர்கள் என்றால் அதை நான் ஏற்றுக் கொள்வேன். ஏனென்றால் காயத்திற்கு பின் நான் விளையாடினேன்.

பெங்கால் அணிக்கு விளையாடுவது என் இதயத்தில் இருந்து விளையாடுவதற்கு சமம். உங்களிடம் பேசினாலே நான் ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கின்றேன். என்னை அந்த மாதிரி ஒரு சர்ச்சையான பவுலராக நீங்கள் மாற்றி விட்டீர்கள். இதனால் உங்களிடம் நான் ஏதேனும் பேசினால் கண்டிப்பாக பிரச்சனையில் நான் சிக்கிக் கொள்வேன்.
ஆனால் உங்களை என்னால் எப்படி குறை சொல்ல முடியும். அனைவரும் இதே தான் செய்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதை பேசுகிறார்கள். ஆனால் என்னுடைய பணி என்பது எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் விளையாடுகின்றோம். என் வாழ்க்கையில் என்ன எழுதி இருக்கிறதோ அது கண்டிப்பாக நடக்கும்.
என்னுடைய அதிர்ஷ்டத்தை நம்பி நான் முன்னோக்கி செல்கின்றேன். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றி, தோல்வி என்பது ஒரு பகுதிதான் என்று முகமது சமி தெரிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சமி 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பின்பு காயம் காரணமாக விளையாடாத சமி பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கு பெறவில்லை. எனினும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சமி அபாரமாக செயல்பட்டு அணியில் வெற்றிக்கு உதவினார். தற்போது சமி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.