மும்பை : காயத்தில் சிக்கி இருந்த முகமது ஷமி தினமும் வலியை பொறுத்துக் கொள்ள ஊசி போட்டுக் கொண்டு 2015 உலகக்கோப்பை தொடரில் ஆடி இருக்கிறார். அது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
அப்போது 2015 உலகக்கோப்பை தொடரின் போது மற்ற இந்திய வீரர்கள் போட்டி முடிந்த உடன் ஹோட்டலில் தங்கள் அறைக்கு திரும்புவார்கள். ஆனால், நான் வலியுடன் ஊசி செலுத்திக் கொள்ள மருத்துவமனைக்கு விரைந்து செல்வேன், இப்படியே அந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் ஆடி சமாளித்தேன் எனக் கூறி இருக்கிறார் ஷமி.

2023 உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். ஆனால், 2015 உலகக்கோப்பை தொடரில் இளம் வீரராக முகமது ஷமி நல்ல ஃபார்மில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்ற 2015 உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையில் இந்திய அணி பங்கேற்றது. இந்திய அணியில் வேகப் பந்துவீச்சில் முகமது ஷமி முக்கிய பந்துவீச்சாளராக இருந்தார்.
அப்போது உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஷமியின் முட்டியில் வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது கடுமையான வலியில் இருந்தாலும் உலகக்கோப்பை வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என நினைத்த ஷமி, உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடிவு செய்தார். ஆனால், அவருக்கு அதிக வலி இருப்பதை அறிந்த அவர் மருத்துவரிடம் கேட்ட போது உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், அப்படி செய்தால் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது எனக் கூறினர்.
ஷமி உலகக்கோப்பை தொடர் முடிந்த பின் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால், வலியை சமாளிக்க தினமும் ஊசி செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது. அந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரை இறுதியுடன் வெளியேறியது. அதன் பின் முகமது ஷமி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அந்த சிகிச்சை முடிந்தவுடன் மருத்துவரிடம் தான் எப்போது மீண்டும் பண்டுவ் வீசலாம் என கேட்டு இருக்கிறார்.
அதற்கு அந்த மருத்துவர், நீங்கள் ஊன்றுகோல் இல்லாமல் நடப்பதே சந்தேகம். அதை முதலில் செய்யுங்கள், பந்து வீசுவதை எல்லாம் மறந்து விடுங்கள் என அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார். அதன் பின் நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஷமி அதில் இருந்து மீண்டு ஆறு மாதம் கழித்து அணிக்கு திரும்பினார். அப்போது அவரால் முன்பு போல பந்து வீச முடியவில்லை என்ற புகார் இருந்தது. ஆனால் அதை எல்லாம் உடைத்து விக்கெட் வேட்டை நடத்தினார் ஷமி.