மனைவி அளித்த புகார்
முஹம்மது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜாஹன் கடந்த ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், பாகிஸ்தான் பெண் ஒருவரிடம், பிக்ஸிங் செய்ய பணம் பெற்றதாகவும் கூறினார்.
வழக்கு
அவர் கூறிய புகார்களை பிசிசிஐ முற்றிலுமாக புறம் தள்ளியது. ஷமி எந்த சிக்கலும் இன்றி தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருகிறார். எனினும், ஹசின், காவல்துறையில் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
சிக்கல்
அதன் அடுத்த கட்டமாக நீதிமன்ற விசாரணை துவங்க உள்ளது. உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் துவங்கி ஜூலை வரை நடைபெற உள்ளது. அடுத்த நீதிமன்ற விசாரணை தேதி ஜூன் 22 அன்று நடைபெறும் என கூறப்படும் நிலையில், இது ஷமிக்கு சிக்கலாக அமைந்துள்ளது.
உலகக்கோப்பை போட்டி
காரணம், ஜூன் 22 அன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் லீக் சுற்று போட்டி நடைபெற உள்ளது. எனவே, ஷமி உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றால், இந்த வழக்கால் அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அணித் தேர்வு
உலகக்கோப்பை அணியில் ஷமி தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன. பிசிசிஐ, இந்த வழக்கால் ஷமி தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றோ, அவரால் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்றோ கருதினால், ஷமியை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாமல் போகலாம்.
மனநிலை
இரண்டாவது, ஷமி வழக்கு விசாரணையில் பங்கேற்க நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவை இல்லை என்ற நிலை இருந்தால், அவர் மீது தீவிரமான வழக்கு விசாரணை இருக்கும் நிலையில், அவர் தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மனநிலையில் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யலாம்.