மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியில் முகமது சமி ஏன் இல்லை என்ற சந்தேகம் சில ரசிகர்களுக்கு இருக்கின்றது. முகமது சிராஜ், பும்ரா, ஆர்ஸ்தீப் சிங் போன்ற மூன்று வேக பந்துவீச்சாளர்கள் மட்டுமே களத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஏன் இந்த தொடரின் இடம் பெறவில்லை. அவர் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணிக்காக ஷமி கடைசியாக விளையாடியது நவம்பர் 19ஆம் தேதி உலக கோப்பை பைனலில் தான்.

அதன் பிறகு முகமது சமிக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் 50 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு அவர் இந்திய அணிக்காக எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. தமக்கு ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள முகமது சமி அதில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
இதனால் ஐபிஎல் தொடரில் கூட முகம்மது ஷமி பங்கேற்காமல் விலகிவிட்டார். இந்த தருணத்தில் தான் முகமது சமி சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் பொய் செய்திகள் பரவின. இதன் காரணமாகத்தான் முகமது சமி குறித்தே பலருக்கு ஞாபகம் வந்திருக்கிறது.
ஆனால் இந்த சர்ச்சை குறித்து எல்லாம் கவலைப்படாத ஷமி, தற்போது இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முகமது சமி ஆயத்தமாகி வருகிறார்.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் என நான்கு மாதத்தில் 10 டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். இதில் இந்திய அணி வெற்றிக்கு முகமது சமி பங்கு மிகவும் முக்கியம் என்பதால் அவர் இந்த தொடருக்கு தயாராக முயற்சி செய்து வருகிறார்